அறிவும் அன்பும்.. அனிருத், யுவன் சங்கர் ராஜா, ஜிப்ரானுடன் இணைந்து கமல் உருவாக்கிய கொரோனா பாடல்!
சென்னை: கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக நடிகர் கமல்ஹாசன் "அறிவும் அன்பும்" என்கிற பாடலை எழுதி இயக்கி உள்ளார்.
Recommended Video
சொந்த வீடுகளையே சிறைகளாக மாற்றியுள்ளது இந்த கொரோனா வைரஸ். அதன் கொடுமைகளை சித்தரித்தும், அதனால் விளைந்த சில நன்மைகளை விவரித்தும் பல பிரபலங்கள் பாடல்களை உருவாக்கி உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் வரிகளில் ஜிப்ரான் இசையில் உருவாகி உள்ள கொரோனா விழிப்புணர்வு பாடலுக்கு பல பிரபலங்கள் குரல் கொடுத்துள்ளனர்.

நாளை ரிலீஸ்
கமல்ஹாசன் வரிகளில் உருவாகி உள்ள இந்த கொரோனா விழிப்புணர்வு பாடலில் மனித நேயம் தான் மேம்பட்டுக் காணப்படுகிறது. கொரொனா என்ற வார்த்தையே எங்கேயும் இல்லாதது குறிப்பிடத்தக்கது. நாளை காலை 11 மணிக்கு திங்க் மியூசிக்கில் இந்த பாடல் வீடியோ வெளியாகவுள்ளது. அதன் அறிவிப்பை போஸ்டர் மற்றும் பாடல் வரிகளுடன் தற்போது கமல் வெளியிட்டுள்ளார்.

இத்தனை பிரபலங்களா
கமல்ஹாசன் எழுதி இயக்கியுள்ள இந்த "அறிவும் அன்பும்" என்கிற பாடலை இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ராக்ஸ்டார் அனிருத், ஸ்ருதிஹாசன், சித் ஸ்ரீராம், தேவி ஸ்ரீபிரசாத், யுவன் சங்கர் ராஜா, ஆண்ட்ரியா, சித்தார்த், முகேன் ராவ், ஷங்கர் மகாதேவன், மாஸ்டர் லிடியன், பாம்பே ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலர் இணைந்து பாடியுள்ளனர்.

தனித்தனியாக
ஒவ்வொரு பாடகரும் அவரவர் வீட்டிலிருந்தே, இந்த பாடலுக்கான விஷுவலை ஒளிப்பதிவு செய்து அனுப்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக அதனை எடிட் செய்து உலகநாயகன் கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் நாளை காலை அந்த பாடலை வெளியிடுகிறது. அனைவரின் ஒற்றுமை முயற்சியே இந்த பாடல் என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

அறிவும் அன்பும்
பொது நலமென்பது தனி மனிதன் செய்வதே
தன் நலமென்பதும் தனி நபர்கள் செய்வதே
பொது நலமென்பது தனி மனிதன் செய்வதே
தன் நலமென்பதும் தனி நபர்கள் செய்வதே
அலாதி அன்பிருந்தால்
அனாதை யாருமில்லை
அடாத துயர் வரினும்
விடாது வென்றிடுவோம்
அகண்ட பாழ் வெளியில்
ஓர் அணுவாம் நம்முலகு -
அதில்
நீரே பெருமளவு.
நாம் அதிலும் சிறிதளவே
சரி சமம் என்றிடும் முன்பு
உனைச் சமம் செய்திடப் பாரு
சினையுறும் சிறு உயிர் கூட
உறவெனப் புரிந்திடப் பாரு
சரி சமம் என்றிடும் முன்பு
உனைச் சமம் செய்திடப் பாரு
சினையுறும் சிறு உயிர் கூட
உறவெனப் புரிந்திடப் பாரு
உலகிலும் பெரியது
உம் அகம் வாழ் அன்பு தான்
உலகிலும் பெரியது
நம் அகம் வாழ் அன்பு தான்.
புதுக் கண்டம் புது நாடு என வென்றார் பல மன்னர்
அவர்
எந்நாளும் எய்தாததை
சிலர்
பண்பால் உள்ளன்பால்
உடன் வாழ்ந்து உயிர் நீத்து அதன் பின்னாலும்
சாகாத உணர்வாகி உயிராகிறார்
சரி சமம் என்றிடும் முன்பு
உனைச் சமம் செய்திடப் பாரு
சினையுறும் சிறு உயிர் கூட
உறவெனப் புரிந்திடப் பாரு
சரி சமம் என்றிடும் முன்பு
உனைச் சமம் செய்திடப் பாரு
சினையுறும் சிறு உயிர் கூட
உறவெனப் புரிந்திடப் பாரு
அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே
அழிவின்றி வாழ்வது
நம் அறிவும் அன்புமே
சரி சமம் என்றிடும் முன்பு
உனைச் சமம் செய்திடப் பாரு
சினையுறும் சிறு உயிர் கூட
உறவெனப் புரிந்திடப் பாரு
அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே...
என்ற பாடல் வரிகளை, தற்போது வெளியிட்டுள்ள போஸ்டருடன் நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











