விழுத்திரு.. தனித்திரு.. வரும் நலனுக்காக நீ தனித்திரு.. கொரோனா விழிப்புணர்வு பாடல்!
சென்னை : இசையமைப்பாளர் சத்யா கொரோனா விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ளார்.
சமீப காலமாக நிறைய இசை அமைப்பாளர்கள் கொரோனா பற்றி பாடல் அமைத்து வெளியிட்டு வருகின்றனர். நிறைய விழிப்புணர்வு தேவை என்றாலும் பாடல் மூலம் சொல்லுவதால் இன்னும் எளிதில் மக்களை சென்றடையும் என்பது இவர்களது நம்பிக்கை. எந்த கருத்தும் நல்ல இசையுடன் கலந்து வந்தால் மக்கள் மனதில் ஆழமாய் பதியும் என்பதால் இந்த முயற்சி எடுத்து உள்ளனர்.

நெடுஞ்சாலை, எங்கேயும் எப்போதும், காஞ்சனா-2, இவன் வேற மாதிரி, தீயா வேலை செய்யணும் குமாரு, ஒத்த செருப்பு போன்ற ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் சி.சத்யா. இவர் தற்போது கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார்.
'விழுத்திரு
தனித்திரு
வரும் நலனுக்காக
நீ தனித்திரு' என்ற இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தப் பாடலை இன்ஜாமம் எழுதியுள்ளார். பின்னணி பாடகர்கள் சத்ய பிரகாஷ், சத்யன் மகாலிங்கம், அபி (கனடா), சுதர்சனன் அசோக்(அமெரிக்கா), கணேசன் மனோகரன், இன்ஜாமம் ஆகியோருடன் இசையமைப்பாளர் சி.சத்யாவும் இணைந்து பாடியுள்ளார்.
பாடல் உருவாக்கம் பற்றி சி.சத்யா கூறியதாவது..
"முன்பு அறிவியல் வளர்ச்சி குறைவு. அதனால் இசைக் கலைஞர்கள் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் இணைந்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது. இப்போது அறிவியல் வளர்ச்சியடைந்துள்ளது. தற்போதுள்ள தடை உத்தரவு காலத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இசையமைப்பாளராக என்னுடைய பங்களிப்பை வழங்க முடிவு செய்தேன்.

இதில் பாடியவர்கள், பாடல் எழுதியவர் அனைவரும் ஆன்-லைன் மூலம் பாடியும், எழுதியும் கொடுத்தார்கள். தொடர்ந்து சில ஆல்பங்களை வெளியிடவுள்ளேன்" என்றார். இவர் தற்போது எழில் இயக்கியுள்ள 'ஆயிரம் ஜென்மங்கள்', சுந்தர்.சி இயக்கும் 'அரண்மனை -3', 'ராங்கி' உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

பாடல்களை கேட்கும் ரசிகர்கள் நல்ல விஷயங்களை புரிந்து கொண்டு கொரோனா என்ற கொடிய நோயை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்பது தான் அனைவரது ஆசையும். விரைவில் எல்லோரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற உந்துதல் ஒவ்வொரு இந்தியனுக்கும் வர துவங்கி உள்ளது . காலம் நல்ல தீர்ப்பை கண்டிப்பாக கொடுக்கும் என்று நம்புவோம்.


Click it and Unblock the Notifications











