சமாதானமா போங்கள்! - நடிகை பாக்யாஞ்சலி, வேலுவுக்கு நீதிபதி ஆலோசனை
சென்னை: வளரும் கலைஞர்கள் இந்த மாதிரி ஒருவர் மீது ஒருவர் பொய்யான புகார்களைக் கொடுத்து பரபரப்பேற்படுத்தாமல் சமாதானமாகப் போகப் பாருங்கள், என நடிகர்கள் பாக்யாஞ்சலி - வேலுவுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை கூறினார்.
உன்னையே காதலிப்பேன் என்ற படத்தில் அறிமுகமான இணை தயாரிப்பாளரும் வில்லன் நடிகருமான வேலு செக்ஸ் தொந்தரவு கொடுப்பதாக அந்த படத்தின் கதாநாயகி பாக்கியாஞ்சலி சென்னை வேப்பேரி போலீசில் புகார் கொடுத்தார்.
ஆனால் பாக்கியாஞ்சலி தன்னிடம் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கிவிட்டு திருப்பித் தராமல் இருப்பதாகவும், அதைக் கேட்டபோது தன்மீது, பொய்ப் புகார் கொடுத்ததாகவும் போலீசில் வேலு புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்று பாக்கியாஞ்சலியும், வேலுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை இணைத்து விசாரிப்பதற்கு நீதிபதி அக்பர் அலி உத்தரவிட்டிருந்தார்.
இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் அசன் முகமது ஜின்னா, '2 பேர் கொடுத்த புகாரும் பொய்யானது என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவர்களுக்கு இடையே இருக்கும் தகராறு சிவில் பின்னணியில் இருப்பதால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் அந்த புகார்களை முடித்துவிட்டனர். அவர்கள் விவகாரத்தில் மேல் விசாரணை தேவையில்லை என்று விசாரணை கைவிடப்பட்டுவிட்டது' என்றார்.
மேலும் அந்த வழக்குக்கான கோப்புகளையும், பரிமாறப்பட்ட காதல் கடிதங்களையும் நீதிபதியிடம் சமர்ப்பித்தார் அரசு வக்கீல்.
வளரும் கலைஞர்களுக்கு இது தேவையா?
அவற்றைப் பரிசீலித்த நீதிபதி அக்பர் அலி, இந்த புகார்களின் உண்மைத் தன்மை சந்தேகத்துக்கிடமானது என்பதை ஒப்புக் கொண்டார். அதைத் தொடர்ந்து, '2 பேருமே வளர்ந்து வரும் நடிகர்கள். தொழிலில் கவனம் செலுத்தாமல் ஒருவர் மீது ஒருவர் பொய்யான புகார் கூறிக்கொண்டிருந்தால் பிரச்சினை வளர்ந்து கொண்டுதான் செல்லும். அது பரபரப்பு செய்தியாக அமையுமே தவிர வேறு பயனில்லை. எனவே 2 தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக செல்வது நல்லது. நான் வழக்கை 21-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறேன்' என்று உத்தரவிட்டார்.
எனவே இருதரப்பும் வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்வார்கள் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











