Vijay: ‘ஜனநாயகன்’ படத்தின் அவசர வழக்கு.. நீதிமன்ற உத்தரவு என்ன?
சென்னை: ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் அவசர வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகன் படத்தில் அளவுக்கு அதிகமாக வன்முறை காட்சிகள் இருந்ததால், தணிக்கை குழு கிட்டத்தட்ட 64 காட்சிகளில் கட்போட்டு பல காட்சிகளை தூக்கிவிட்டதாகவும், படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் கொடுத்து இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், படம் வெளியாக இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால், ஜனநாயகன் படத்தின் டிக்கெட் முன் பதிவு பல இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகன் அவசர வழக்கு: விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், படத்தை மிகபெரிய வெற்றிப்படமாக்க வேண்டும் என ரசிகர்கள் அனைவரும் காத்து இருக்கும் நிலையில், தணிக்கை குழுவின் இந்த செயல் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், நீதிபதி பிடி ஆஷா முன்பு முறையீடு செய்தார். இதையடுத்து, இந்த வழக்கை இன்று மதியம் 2.30 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
படம் வெளியாவதில் சிக்கல்: மதியம் 2.30 மணிக்கு ஜனநாயகன் வழக்கு விசாரணைக்கு வந்த போது, தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின் படத்தில் அதிக வன்முறை இருப்பதாக புகார் அளிக்கப்பட்டதாக கூறி, மீண்டும் மறு தணிக்கைக்கு படம் அனுப்பப்பட்டுள்ளது என்றார். படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவிலை என்றால், படக்குழுவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் அவர் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜனநாயகன் படத்துக்கு சென்சார் கோரிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்துள்ளார். நாளை தணிக்கைக்குழு சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் படம் 9ம் தேதி வெளியாவதில் சிக்கல் ஏற்படும்.


Click it and Unblock the Notifications











