விஜய்யின் ஜில்லாவுக்குத் தடையில்லை... ரிலீஸானது!!
சென்னை: விஜய்யின் ஜில்லா படத்துக்கு எந்தத் தடையும் இல்லை என்று சென்னை பெருநகர நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி இன்று வெளியாகிறது ஜில்லா.

வழக்கு
சென்னை சேலையூரில் வசிப்பவரான ஆர். மகேந்திரன் நேற்று சென்னையிலுள்ள 16-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் விஜய் நடித்த ஜில்லா படத்தை ரிலீஸ் செய்ய தடைவிதிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்தார்.

ஏற்கெனவே ஜில்லா...
அவர் தனது மனுவில், தான் சவுமிதா ஸ்ரீ ஆர்ட்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை ஸ்ரேயா ஆகியோர் தெலுங்கில் நடித்த ‘பகீரதா‘ என்ற படத்தை தமிழில் ‘ஜில்லா' என்ற பெயரில் மொழியாக்கம் செய்ததாகவும், இப்படத்தின் தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் டி.வி. தொடர் தயாரிப்பாளர் கில்டில் 2008-ம் ஆண்டு பதிவு செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.

2008-ல்
இந்த தமிழாக்கம் செய்யப்பட்ட ஜில்லா படத்தை திரையரங்குகளில் வெளியிட தணிக்கை சான்றிதழை 28-5-2008 அன்று பெற்றுள்ளதாகவும், படத்தை வெளியிட தகுந்த நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்ததாகவும் மேலும் தெரிவித்திருந்தார்.

தடை கோரி வழக்கு
இந்த நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜில்லா' என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட படம் வருகிற 10-ந்தேதி வெளியாகப் போவதாக பத்திரிகையில் விளம்பரம் வெளியாகியுள்ளது. எனவே விஜய் நடித்துள்ள ஜில்லா என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என கோரியிருந்தார்.

நீதிபதி தள்ளுபடி
இன்றைய நீதிமன்ற விசாரணையின் முடிவில் இம்மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். எனவே ஜில்லா படம் திட்டமிட்டபடி நாளை வெளிவருகிறது.

1200 அரங்குகளில்..
ஜில்லா படம் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை மற்றும் உலக நாடுகளில் 1200 அரங்குகளில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











