தலைவரே.. தலைவரே.. வரி கட்டி ஆகணும் தலைவரே.. எஸ்.ஜே. சூர்யா வருமான வரி வழக்கு.. கோர்ட் அதிரடி!
சென்னை: கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் வருமான வரியே கட்டாமல் நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா மோசடி செய்துள்ளார் என தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே. சூர்யா தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஜித்தின் வாலி, விஜய்யின் குஷி படங்களை இயக்கி முன்னணி இயக்குநரான எஸ்.ஜே. சூர்யா, நியூ படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது, வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி வரும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ரியல் வில்லன்களாக மாறியுள்ளனர்.

7 கோடி வருமான வரி
கடந்த 2002 - 03 முதல் 2006- 07 வரையிலான ஆறு நிதியாண்டுகளுக்கும், 2009-10ம் நிதியாண்டுக்கும் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யவில்லை எனவும், வருமான வரியாக 7 கோடியே 57 லட்சம் ரூபாய் செலுத்த வருமான வரித்துறை சார்பில் இயக்கநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

6 வழக்குகள்
இந்த நோட்டீசை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை வருமான வரித் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுக்கு எதிராக வருமான வரித்துறை சார்பில் 2015ம் ஆண்டு ஆறு வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை எழும்பூர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

எஸ்.ஜே. சூர்யா கோரிக்கை
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்த போது, குறிப்பிட்ட நிதியாண்டுகளின் வருமான வரிக் கணக்குகள் மறுமதிப்பீடு நடைமுறைகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்ஜே சூர்யா தரப்பில் வாதிடப்பட்டது. வருமான வரித் துறை தரப்பில், முறையான சோதனை நடத்தி, வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தான் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்றம் உத்தரவு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாததால் எஸ் ஜே சூர்யா இந்த வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறி வழக்கை ரத்து செய்யக் கோரிய அவரது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

குற்ற வழக்கு
மேலும், வருமானவரித் துறையின் விசாரணையும், குற்ற வழக்கு விசாரணையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, மறுமதிப்பீடு நடவடிக்கை என்பது, குற்ற வழக்கு தொடர்வதற்கு எந்த விதத்திலும் தடையாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், எஸ்.ஜே. சூர்யாவுக்கு சட்ட ரீதியான சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சிம்புவின் மாநாடு படத்தில் வில்லனாக கலக்கிய எஸ்.ஜே. சூர்யா, சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











