கோர்ட்... பாகுபலி, காக்கா முட்டையை விட அப்படி என்ன 'ஒஸ்தி'?
மும்பை: ஆஸ்கர் விருது ஒவ்வொரு திரைக் கலைஞனின் மூளையிலும் படிமங்களாக புதைந்திருக்கும் ஒரு மங்கலான கனவு. ஒரு சிலரின் கடின உழைப்புக்கு கதவுகளைத் திறந்து விடும் ஆஸ்கர், பலருக்கு வெறும் கானல் நீராகவே மாறிவிடுகிறது.
அந்த வகையில் இந்த வருடமும் தமிழ்ப் படங்கள் ஏன் தென்னிந்தியப் படங்களுக்கு வழக்கம் போல எட்டாக்கனியாக மாறிவிட்டது ஆஸ்கர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காக்கா முட்டை மற்றும் பாகுபலி திரைப்படங்களை அலேக்காகத் தூக்கி வீசியது மட்டுமின்றி சுமார் 30 இந்தியத் திரைப்படங்களை ஓரங்கட்டி இந்த வரிசையில் தகுதி பெற்றிருக்கிறது மராத்திய மொழியில் வெளியான கோர்ட் திரைப்படம்.

கோர்ட் கதை என்ன
சமூகத்துக்காகப் போராடும் வயதான தலித் கவிஞர் ஒருவர் மீது வழக்கு தொடரப்படுகிறது. அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பது தான் கோர்ட் படத்தின் கதை. இந்திய நீதித்துறையின் செயல்பாடு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பும் 'கோர்ட்', திரைப்படமானது குற்றம் சாட்டப்பட்டவர், அவருக்காக வாதாடும் வக்கீல், அரசு வழக்கறிஞர், அந்த வழக்கை பார்வையிடும் நீதிபதி என பலரின் பார்வையில் விரிகிறது.

துப்புரவுத் தொழிலாளி
சாக்கடையைத் துப்புரவு செய்யும் ஒரு தொழிலாளியை தற்கொலைக்குத் தூண்டியதாக நாராயணன் காம்ளே என்ற மராத்திய கவிஞர் சிறையில் அடைக்கப்படுகிறார். இந்தப் படத்தில் அந்தத் துப்புரவுத் தொழிலாளியின் தற்கொலை கவிஞரின் கைதுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றது.

ஒவ்வொருவரின் பார்வையில்
இந்தப் படத்தில் வரும் காட்சிகள் எந்தத் தனி மனிதரின் பார்வையிலும் இல்லாமல் அவரவர் பார்வையின் செல்கின்றது. அரசாங்க வழக்கறிஞர், கவிஞரின் பணக்கார வழக்கறிஞர் மற்றும் வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஆகியோரின் பார்வைகளில் இந்தக் கதை செல்லும் விதம் புதிது.

உண்மையான
படத்தில் இறந்து போன துப்புரவுத் தொழிலாளியின் மனைவியாக வருபவரின் வாழ்க்கையில் நிஜமாகவே அந்த மாதிரி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஆம் அவரின் கணவர் இறந்து போனதும் இந்த மாதிரியான ஒரு விபத்தில் தானாம்.

படத்தின் மிகப்பெரிய பலம்
இந்தப் படத்தில் நடித்தவர்கள் யாரும் தொழில்முறை நடிகர்கள் அல்ல என்பது படத்தின் மிகப்பெரிய பலமாக மாறியிருக்கிறது. அன்றாட வாழ்வை எளிமையாகக் கடக்கும் சாதாரண மனிதர்களைக் கொண்டு அவர்களை அடையாளம் கண்டு படத்தை இயக்கியிருக்கிறார் சைத்தன்ய தம்ஹனா. 27 வயதில் வெனிஸ் திரைப்பட விழா மற்றும் மும்பை திரைப்பட விழாவில் பரிசுகளைப் பெற்று சாதனை செய்திருக்கிறார் இந்த இளைஞர்.

மற்ற படங்களை விட
ஆஸ்கர் தேர்வில் பல படங்கள் தகுதி பெற்ற நிலையில் இந்தப் படம் இறுதியாகத் தேர்வாக காரணம், மற்ற படங்களை விட உண்மையை மிக நெருக்கமாக சொல்லியிருக்கும் அல்லது அணுகியிருக்கும் விதம் என்று கூடச் சொல்லலாம்.
கோர்ட் - நீதித் துறையின் மறுபக்கம்...


Click it and Unblock the Notifications











