இளையராஜாவுக்கு செக்.. வனிதா விஜயகுமார் செம மகிழ்ச்சியா இருப்பாரே.. என்ன நடந்தது?
சென்னை: வனிதா விஜயகுமார் இயக்கிய Mrs&Mr படத்தால் கடந்த சில நாட்களாகவே திரைத்துறையில் விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன. தன்னிடம் அனுமதி கேட்காமல் தான் இசையமைத்த பாடலை அந்தப் படத்தில் பயன்படுத்தியதற்கு எதிராக இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதுதொடர்பாக பேசும்போது வனிதா விஜயகுமார் கூறிய ஒரு கருத்து இந்த விஷயத்தை மேற்கொண்டு பரபரப்பாக்கியது.
நடிகையும், இயக்குநருமான வனிதா விஜயகுமார் இப்போது Mrs&Mr என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அவரது மகள் ஜோவிகா தயாரித்திருக்கிறார். ராபர்ட் மாஸ்டர், கிரண், ஷகிலா என பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். படமானது கடந்த 11ஆம் தேதி வெளியானது. வனிதா இயக்கிய முதல் படம் என்பதால் இதிலும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.
ஆரம்பித்த பஞ்சாயத்து: நினைத்தபடியே இப்படத்தால் சர்ச்சைகள் எழ ஆரம்பித்திருக்கின்றன. முதலில் படத்தை பார்த்த ரசிகர்களோ, இது படமே இல்லை; ஆபாச காட்சிகள் அவ்வளவு இருக்கின்றன; ஏனோதானோவென்று எடுத்து வைத்திருக்கிறார்கள் என கழுவி கழுவி ஊற்றினார்கள். அதனைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன் படத்துக்கு இளையராஜா இசையமைத்த சிவராத்திரி பாடலை பயன்படுத்தினார்கள்.

நீதிமன்றம் சென்ற ராஜா: அதனையடுத்து இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், "கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நான் இசையமைத்திருந்த சிவராத்திரி என்ற பாடலை Mrs&Mr என்ற படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இப்படத்துடைய விளம்பரத்தில் என்னுடைய பெயரையும் என் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே அவைகளுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.
விசாரணைக்கு வந்தது: இளையராஜா வழக்கு தொடர்ந்ததை எதிர்பார்க்காத வனிதா எமோஷனலாக பேசினார். மேலும் சட்டப்பூர்வமாக சந்திக்கிறேன் என்றும் சொல்லியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தப் பாடலின் உரிமையை சோனி நிறுவனத்திடம் முறையான அனுமதி பெற்றுவிட்டோம். மேற்கொண்டு விரிவான பதில் மனு அளிக்க் தயாராக இருக்கிறோம் என்று வனிதா தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
இளையராஜாவுக்கு செக்: இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதியோ, "திரைப்படம் வெளியாகிவிட்டதால் இனிமேல் தடை விதிக்க முடியாது. வேண்டுமானால் மனுதாரர் இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம்" என கூறி; வனிதா தரப்பு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 21ஆம் தேதி ஒத்தி வைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்னதாக, இந்த வழக்கு விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வனிதா, "நான் இளையராஜாவின் வீட்டுக்கு மருமகளாக போயிருக்க வேண்டியவள்" என்று கூறி அதிர்ச்சியை கிளப்பியது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











