'விசித்திரன்' டைட்டில் விவகாரம்.. இயக்குநர் பாலா, ஆர்.கே.சுரேஷுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னை: விசித்திரன் பட டைட்டில் விவகாரத்தில் இயக்குனர் பாலா, நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம், 'ஜோசப்'. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை பத்மகுமார் இயக்கி இருந்தார்.
த்ரில்லர் படமான இதன் கதையை ஷஹி கபிர் எழுதினார். ஜோஜு ஜார்ஜ் படத்தைத் தயாரித்து, முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

பி ஸ்டுடியோஸ்
அவரோடு திலீஷ் போத்தன், இர்ஷாத், மாளவிகா மேனன் உட்பட பலர் நடித்தனர். இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகி இருக்கிறது. பிரபல இயக்குநர் பாலா, தனது பி ஸ்டுடியோஸ் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். மலையாளத்தில் இயக்கிய பத்மகுமார், தமிழிலும் இயக்கியுள்ளார்.

நீதிமன்றத்தில் வழக்கு
இந்தப் படத்துக்கு விசித்திரன் என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில், இந்த டைட்டிலுக்கு தடை கோரி, சாலிகிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சென்னை மாநகர 14 வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

விசித்திரன்
நான் சி.எஸ்.கே. புரோடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். 2015-ம் ஆண்டு விசித்திரன் என்ற தலைப்பை தயாரிப்பாளர்கள் கில்டில் பதிவு செய்து, கடந்த மார்ச் மாதம் வரை புதுப்பித்து வந்துள்ளேன். இந்த தலைப்பைப் பதிவு செய்வதற்கு முன், யாராவது இந்த தலைப்பை பதிவு செய்துள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி உறுதி செய்த பின்பே எனக்கு இந்த தலைப்பு ஒதுக்கப்பட்டது.

இயக்குனர் பாலா
இந்நிலையில், அதே டைட்டிலை பயன்படுத்தி, பி ஸ்டுடியோ நிறுவனம் மூலம் இயக்குனர் பாலாவும், இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷூம் படம் தயாரித்து வருகின்றனர். மேலும் ஆர்.கே.சுரேஷ் அதில் நாயகனாகவும் நடித்துள்ளார். தான் பதிவு செய்துள்ள விசித்திரன் என்ற தலைப்பில் படத்தைத் தயாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.

வழக்கு தள்ளிவைப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பி ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளரான இயக்குநர் பாலா மற்றும் இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கை 25- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


Click it and Unblock the Notifications











