‘பப்பாளி’ பிரச்சினை.. ஜீவாவின் ‘ஜிப்ஸி’க்கு தடை கோரி வழக்கு.. தயாரிப்பாளர் பதிலளிக்க உத்தரவு!
ஜிப்ஸி பட வழக்குத் தொடர்பாக அதன் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: ஜீவா நடித்துள்ள 'ஜிப்ஸி' படத்துக்கு தடைகோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், தயாரிப்பாளர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜுமுருகனின் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ஜிப்ஸி. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக, மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் நடாஷா சிங் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்துக்கு தடைவிதிக்கக் கோரி தினேஷ் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் அவர், 'கடந்த 2014-ம் ஆண்டு அரசூர் மூவிஸ் உரிமையாளரான அம்பேத்குமார், பப்பாளி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக என்னிடம் ரூ.40 லட்சம் வாங்கினார். இந்த தொகையை 3 மாத காலத்துக்குள் வட்டியுடன் திரும்ப தருவதாக கூறியிருந்தார்.
இந்த தொகையை பப்பாளி திரைப்படத்தைத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என ஒப்பந்தம் செய்யப்பட்டது. பப்பாளி படம் வெளியான பின்னரும் கூட அம்பேத்குமார் என்னிடம் வாங்கிய பணத்தைத் திரும்பத் தரவில்லை.
இந்தநிலையில் நடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்தை அம்பேத்குமார் தயாரித்துள்ளார். படம் விரைவில் வெளியாக உள்ளது. எனவே என்னிடம் வாங்கிய ரூ.40 லட்சத்தை வட்டியுடன் சேர்த்து ரூ.45 லட்சமாக திருப்பித் தராமல் ஜிப்ஸி படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்' என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சசிகலா, இது தொடர்பாக தயாரிப்பாளர் அம்பேத்குமார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Click it and Unblock the Notifications











