RIPCrazymohan:கமலுக்கு அள்ளி கொடுத்தீங்களே கிரேஸி மோகன்.. ரஜினிக்கு மட்டும் ஏன் கிள்ளி கொடுத்தீங்க?
சென்னை: மறைந்த எழுத்தாளர் கிரேஸி மோகன் ரஜினியின் படங்களுக்கு அவ்வளவாக வசனம் எழுதியதில்லை என்ற குறை ரசிகர்களுக்கு உண்டு.
தமிழ் சினிமா வரலாற்றில் காமெடி என்ற பக்கத்தில் அழிக்க முடியாத பெயர் கிரேஸி மோகனுடையது. தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் எழுத்தால் பலரையும் சிரிக்க வைத்தவர்.

அதிலும் குறிப்பாக இவரின் வசனத்தில் கமல் நடித்த படங்கள் எல்லாமே சிரிப்பு சரவெடிகள் தான். கமலுடன் அதிக படங்களில் இவர் பணிபுரிந்துள்ளார். சதிலீலாவதி, மைக்கேல் மதனகாமராஜன், காதலா காதலா, அவ்வை சண்முகி என இந்தப் பட்டியல் நீளமானது.
ஆனால், கமலுக்கு காமெடியை அள்ளி அள்ளிக் கொடுத்தவர், ரஜினிக்கு ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் வசனம் எழுதியுள்ளார். அது சுந்தர்.சி இயக்கிய அருணாச்சலம் படம் தான்.
பொதுவாகவே ரஜினி படங்களில் நகைச்சுவை தூக்கலாக இருக்கும். அருணாச்சலம் படத்திலும் பாம்பு காமெடியில் ஆரம்பித்து கிளைமாக்ஸ் வரை காமெடியால் நிறைந்திருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்த ரஜினியின் காமெடிப் படமாகவே அப்படம் பார்க்கப்பட்டது. ஆனால் ஏனோ ரஜினி, கிரேஸி மோகன் கூட்டணியில் அதிக படங்கள் வெளிவரவில்லை.
கிரேஸி மோகன் மறைவுச் செய்தியைக் கேட்டு துக்கத்தில் இருக்கும் ரசிகர்கள் அவரது பட வசனங்களைக் குறிப்பிட்டு அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











