கேன்சருக்கு சிகிச்சைப் பெற்று வந்த பிரபல டிவி நடிகர் உயிரிழப்பு.. திரையுலகம் இரங்கல்!
மும்பை: பிரபல டிவி நடிகர் உயிரிழந்ததை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சோனி டிவியில் ஒளிபரப்பான தொடர், கிரைம் பேட்ரோல். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவான தொடர் இது.
மக்களிடம் வரவேற்பை பெற்ற இந்த தொடருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

தொடர்களில்
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான இந்த தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் ஷஃபிக் அன்சாரி. இந்த தொடர் உட்பட பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார். மும்பையில் உள்ள மந்தன்புரா பகுதியில் வசித்து வந்த அன்சாரி கடந்த சில வருடங்களுக்கு முன் வயிற்றுப் பிரச்னைக்காக மருத்துவமனைக்குச் சென்றார்.

மோசமானது
அப்போது அவருக்கு கேன்சர் பாதித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். கேன்சரோடு போராடி கொண்டே சீரியல்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், அவரது உடல் நிலை மோசமானது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார்.

இந்தி சினிமாவில்
இதை சினிமா மற்றும் டிவி நடிகர்கள் சங்கம் ட்விட்டரில் உறுதி செய்துள்ளது. அந்த சங்கம் இரங்கலைத் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்தி சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்கள் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் அன்சாரி, இந்தி சினிமாவில் 1974 ஆம் ஆண்டில் இருந்தே பணிபுரிந்து வருகிறார்.

அமிதாப்பச்சன்
அசிஸ்டென்ட் டைரக்டராகவும் டைரட்டராகவும் பணியாற்றிய அவர், பின்னர் நடிகர் ஆனார். அமிதாப்பச்சன், ஹேமமாலினி நடித்த பாக்பன் படத்துக்கு இவர்தான் டைரட்டர். மேலும் தர்மேந்திரா, ஹேமமாலினி நடித்த தோஸ்த், மாதுரி தீக்ஷித் நடித்த இஜாத்தார், மிதுன் சக்கரவர்த்தியின் பியார் ஹுவா ஜோரி ஜோரி உட்பட சில படங்களுக்கு ஸ்கிர்ப்ட் டைரட்டராக பணியாற்றியுள்ளார்.


Click it and Unblock the Notifications











