இப்போ எதுக்குய்யா சின்மயியை வம்புக்கு இழுக்குறீர்: இயக்குநரை கேட்ட நெட்டிசன்கள்
சென்னை: இயக்குநர் சி.எஸ். அமுதன் போட்ட ஒரு ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் ஏன் சின்மயியை வம்புக்கு இழுக்குறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர் சிங், சயிப் அலி கான், நம் சிவகார்த்திகேயன், அனிருத் உள்ளிட்டோர் நேரில் கண்டு ரசித்துள்ளனர்.

போட்டியை காண சென்ற இடத்தில் ரன்வீர் சிங் ஷிகர் தவானுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த புகைப்படத்தில் ரன்வீர் சிங் பெரிய கூலிங் கிளாஸ் அணிந்துள்ளார். வித்தியாசமாக உடை அணிவதற்கும், கூலிங் கிளாஸ் போடுவதற்கும் பெயர் போனவர் ரன்வீர் சிங். அவர் உடை அணியும் விதம் அவரின் மனைவியான தீபிகா படுகோனேவுக்கு பிடிக்கவில்லை என்று கூட கிசுகிசுக்கப்பட்டது.
நேற்றைய போட்டியை பார்த்தவர்கள் ரன்வீர் சிங்கின் கூலிங் கிளாஸையும் பார்த்துள்ளனர். அது போன்று ஒரு கூலிங் கிளாஸ் கிடைக்குமா என்று சமூக வலைதளங்களில் நக்கலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இயக்குநர் சி.எஸ். அமுதனோ, ரன்வீர் சிங்கின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, சின்மயி இந்த கூலிங் கிளாஸ் உங்களுக்கு பிடிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார். அமுதனின் ட்வீட்டை பார்த்த சின்மயியோ, பாவம் போன்று இருக்கும் ஸ்மைலியை பதிலாக போட்டுள்ளார். ஆனால் நெட்டிசன்களோ, ஏன்யா அந்த புள்ளைய வம்புக்கு இழுக்கிறீங்க என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னதாக தேர்தலில் வாக்களித்துவிட்டு மை படிந்த விரலுடன் புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டார் சின்மயி. அந்த புகைப்படத்தில் சின்மயி அணிந்திருந்த பெரிய கூலிங் கிளாஸை பார்த்த அமுதன், வின்ட்ஷீல்டை மீண்டும் காரில் எப்படி பொருத்துவீர்கள் என்று கேட்டு கலாய்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரன்வீர் சிங்கின் கூலிங் கிளாஸை பாரத்து பலரும் கிண்டல் செய்கிறார்கள். இது ரன்வீருக்கு தெரியாமல் இல்லை. யார் கிண்டல் செய்தால் எனக்கு என்ன, எனக்கு எது பிடிக்கிறதோ அதை தான் பயன்படுத்துவேன் என்ற ஒரு முடிவோடு உள்ளார் அவர். ரன்வீரின் மனதைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும்.


Click it and Unblock the Notifications











