சினிமாவாகிறது.. 20 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து இரக்கமின்றி கொன்ற 'சயனைடு' மோகனின் கதை!
சென்னை: இருபது பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 'சயனைடு' மோகனின் கதை சினிமாவாகிறது.
Recommended Video
கர்நாடக மாநிலம் பண்ட்வால் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார்.
ஆசிரியரான இவர், கடந்த 2003ம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டுக்குள் 20 பெண்களை சயனைடு கொடுத்து கொன்றுள்ளார்.

பெண்களை மயக்கி
வனத்துறையில் பணியாற்றுவதாகவும் தனது பெயர் சுதாகர் ஆச்சாரியா என்றும் கூறி பெண்களை மயக்கி இருக்கிறார். பிறகு அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து சயனைடு கொடுத்து இரக்கமில்லாமல் கொன்றுள்ளார். இவர் மீது தொடரப்பட்ட வழக்குகளில் ஐந்தில் அவருக்கு மரண தண்டனையும் மற்ற வழக்குகளில் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

ஆயுள் தண்டனை
5 மரண தண்டனைகளில், இரண்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இருபதாவது வழக்கில், சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த வழக்கில் கேரளாவின் காசர்கோடைச் சேர்ந்த 25 வயது பெண்ணை 2009 ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொள்வதாகப் பொய் சொல்லி பெங்களூரு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண்ணுடன் ஒன்றாகத் தங்கிய மோகன், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

கருத்தடை மாத்திரை
அடுத்த நாள் அந்தப் பெண்ணிடம், கருத்தடை மாத்திரை இது, சாப்பிடு என்று சொல்லி சயனைடு தடவிய மாத்திரையை கொடுத்துள்ளார். அதை அந்தப் பெண் முழுங்கியதும் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதே வழியைதான் ஒவ்வொரு பெண்களைக் கொல்லவும் மோகன் பின்பற்றியுள்ளார். 20 வது வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதித்தது.

ராஜேஷ் டச்ரிவர்
இந்நிலையில், இந்தக் கொலைகளை மையமாக வைத்து, சினிமா படம் உருவாக இருக்கிறது. படத்தை ராஜேஷ் டச்ரிவர் (Rajesh Touchriver) இயக்குகிறார். இவர், இன் த நேம் ஆஃப் புத்தா, தெலுங்கில், நா பங்காரு தள்ளி உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான குறும்படங்களையும் விளம்பர படங்களையும் இயக்கி இருக்கிறார்.

கொரோனா பிரச்னை
இந்தப் படம், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் உருவாகிறது. படத்துக்கு சயனைடு என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் இருந்து முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர். தொழிலதிபர் பிரதீப் நாராயணன் தயாரிக்க இருக்கிறார். கொரோனா பிரச்னைகள் முடிந்த பிறகு இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications