திரைத்துறைக்கு தலைவலி கொடுத்த தமிழ் ராக்கர்ஸ் பைரசி டீமை தட்டித்தூக்கிய காவல்துறை!
திருவனந்தபுரம்: தமிழ் சினிமா உலகத்தினருக்கு பல ஆண்டுகளாக பெரும் தலைவலியாக, மாபெரும் நஷ்டத்தினை ஏற்படுத்தி வருவது என்றால் அது தமிழ் ராக்கர்ஸ் என்ற சட்டவிரோத பைரசி கும்பல் என்று சொல்லலாம். நூற்றுக்கணக்கான கோடிகள் செலவு செய்து ஆயிரக்கணக்கான கலைஞர்கள் இணைந்து இரவு, பகல் , மழை, வெயில், குளிர் என அனைத்து இயற்கைச் சீற்றங்களையும் எதிர்கொண்டு உயிரைக் கொடுத்து ஒரு படத்தை உருவாக்குகின்றனர். பல படங்களின் படப்பிடிப்பின்போது கலைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இப்படியான சவாலான சூழலில் ஒரு படம் வெளியானால், தமிழ் ராக்கர்ஸ் போன்ற சட்டவிரோத பைரசி குழு படத்தினை திருட்டுத் தனமாக இணையத்தில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ராயன் படத்தினை கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் தனது மொபைல் போனில் ரெக்கார்ட் செய்து கொண்டு இருந்த தமிழ் ராக்கர்ஸைச் சேர்ந்த ஒருவரை சைபர் க்ரைம் காவல்துறை செய்துள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருக்கக் கூடிய ஏரியஸ் தியேட்டரில் படம் பார்ப்பவர் போல் டிக்கெட் புக் செய்து சென்றுள்ளார் மதுரையைச் சேர்ந்த ஜெப் ஸ்டீபன் ராஜ். இவர் தியேட்டருக்குள் சென்று தனது மொபைலில் மொத்தப் படத்தையும் ரெக்கார்ட் செய்துள்ளார். அப்போது சைபர் க்ரைம் காவல்துறை அவரை கைது செய்துள்ளது.
பிருத்விராஜின் மனைவி: கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஏரியஸ் தியேட்டரில் படத்தை பதிவு செய்து கொண்டிருந்த போது மதுரையை சேர்ந்த ஜெப் ஸ்டீபன் ராஜை கைது செய்துள்ளது சைபர் க்ரைம் போலீசார். இது குறித்த தென்னிந்திய நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறனின் மனைவி சுப்ரியா பிருத்விராஜ் அளித்த புகாரின் பேரில் க்ரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
டெலிகிராம் சேனல்: தமிழ் ராக்கர்ஸ் வலைதளத்தில் மட்டுமின்றி டெலிகிராம் செயலியில் தனியாக பக்கம் ஒன்றை நடத்தியும் வந்துள்ளனர். அந்த பக்கத்திலும் திருட்டுத்தனமாக ரெக்கார்ட் செய்த படங்களை பகிர்ந்து வந்துள்ளனர். இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் ஸ்டீபன் ராஜிடம் விசாரிக்கையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜை சைபர் க்ரைம் போலீசார் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.


Click it and Unblock the Notifications











