பீஸ்ட் ரிசல்ட்டை நெல்சன் எப்படி எதிர்கொண்டார் தெரியுமா?.. கவின் பகிர்ந்த தகவல்
சென்னை: டாடா படத்தில் நடித்திருக்கும் கவின் பீஸ்ட் படத்தின் விமர்சனங்களை நெல்சன் திலீப்குமார் எப்படி எதிர்கொண்டார் என்பது குறித்து பகிர்ந்திருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும், விஜய் டிவியில் பணிபுரிந்தவருமான நெல்சன் திலீப்குமார் சிம்பு, ஹன்சிகாவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை தொடங்கினார். ஆனால் ஏதோ காரணங்களால் அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. இதனையடுத்து மீண்டும் விஜய் டிவிக்கே சென்ற நெல்சன் அங்கு பல நிகழ்ச்சிகளை இயக்கிக் கொண்டிருந்தார்.

முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த நெல்சன்
சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த நெல்சன் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார். கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மிகப்பெரும் ஹிட்டானது. யோகிபாபுவும் இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் கவனம் ஈர்த்ததால் நெல்சன் கவனிக்கப்படக்கூடிய இயக்குநராக மாறினார்.

டாக்டர் வசூலித்த 100 கோடி ரூபாய்
இதனையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்திருந்தார். அர்ச்சனா, வினய் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் மெகா ஹிட்டாகி 100 கோடி ரூபாயை வசூல் செய்தது. மேலும் படத்தில் இடம்பெற்றிருந்த டார்க் காமெடி காட்சிகளும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ரோஸ்ட்டான பீஸ்ட்
முதல் இரண்டு படங்களும் ஹிட் கொடுத்ததால் விஜய்யை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு அமைந்தது. பீஸ்ட் என்று பெயரிடப்பட்ட அந்தப் படம் கடந்த ஆண்டு வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் நெல்சன் திலீப் குமார் ட்ரோல் மெட்டீரியல் ஆனார். அதுமட்டுமின்றி, விஜய் என்ற ஸ்டாரை மட்டும்தான் நெல்சன் நம்பியிருக்கிறார். கதை என்ற ஒன்று இல்லவே இல்லை எனவும் பலர் வெளிப்படையாகவே விமர்சனத்தை முன்வைத்தனர்.

பீஸ்ட்டுக்கு வந்த விமர்சனத்தை எப்படி எதிர்கொண்டார் நெல்சன்?
இந்நிலையில் டாடா படத்தில் நடித்த கவின், நெல்சன் திலீப்குமார் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வார் என்பது குறித்து பேசியிருக்கிறார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியின்போது பேசிய கவின், "விஜய் டெலி அவார்ட்ஸில் விருது வாங்கிவிட்டு அவரிடம் இதுதான் அண்ணா எனது முதல் விருது என்று சொன்னேன். சரி ஓகே வாடா அடுத்த வேலையை பார்ப்போம்னு சொன்னார்.
என்னுடைய முதல் படம் கொஞ்சம் நெருக்கடியில் இருக்கும்போது அவரிடம் அதுகுறித்து சொன்னேன். அதற்கும் சரி ஓகேடா வா அடுத்த வேலையை பார்ப்போம்னு சொன்னார்.
நான் அவரிடம் பார்த்த ஒரு விஷயம் என்னவென்றால் வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் இரண்டையும் நாம் ஒரேமாதிரி எடுத்துக்கொண்டால் நம்முடைய மனநிலை எந்த குழப்பமும் அடையாமல் அமைதியாக இருக்கும் என்பதுதான்" என்றார்.

ரஜினியை இயக்கும் நெல்சன் திலீப்குமார்
பீஸ்ட் படத்தின் படுதோல்விக்கு பிறகு நெல்சன் தற்போது ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கிவருகிறார். படம் தீபாவளிக்கு வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட்டில் சந்தித்த விமர்சனங்களையும், ட்ரோல்களையும் ஜெயிலர் படம் மூலம் நெல்சன் துடைத்தெறிய வேண்டுமென்பதுதான் அவருக்கு நெருக்கமானவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











