”இப்படித்தான் என்னை வீழ்த்தினார்” மஞ்சுமல் பாய்ஸ் நடிகருடனான காதல் கதையை ஓபன் செய்த அபர்ணா தாஸ்!
கொச்சின்: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தினை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். அதேபோல் டாடா படத்தையும் அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது. மக்களின் பெரும் கவனம் பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்திருந்த தீபக் பரம்பொலும் டாடா படத்தில் நடித்திருந்த நடிகை அபர்ணா தாஸும் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் மிகவும் எளிமையாக தங்களது காதல் திருமணத்தை குடும்பத்தினர் மத்தியில் செய்து கொண்டனர்.
இவர்களது திருமணம் காதல் திருமணம் என்பதால் இவர்களது காதல் குறித்த கேள்வி ரசிகர்கள் மத்தியில் வெகுவாக இருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான மனோகரம் என்ற மலையாள படத்தில் இருவரும் இணைந்து நடிக்கையில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி திருமணத்தில் கைகூடி உள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் ஹனிமூன் சென்று இருந்த இந்த புது தம்பதியர் திரும்பி வந்ததும் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளனர். அந்த பேட்டியில் தங்களது காதல் குறித்து பேசி உள்ளனர்.

மனோகரம் படம்: அந்த பேட்டியில் நடிகை அபர்ணா தாஸ் பேசுகையில், "நான் தீபக்கை முதல் முதலில் வடக்கஞ்சேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் தான் பார்த்தேன். சாப்பிட்டுவிட்டு கை கழுவ சென்ற இடத்தில் என்னை பார்த்ததும் தீபக் வணக்கம் சொன்னார். அந்த குணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் பிறகு மனோகரம் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு தீபக் பரம்பொலை சந்தித்தேன். அப்போது அவர் என்னை யார் என்றே தெரியவில்லை என்றும் நினைவில் இல்லை என்றும் கூறிவிட்டார். மனோகரம் படத்திற்கு தீபக் தான் என்னை பரிந்துரை செய்தார். அங்கு ஏற்பட்ட இருவருக்கும் இடையிலான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

அதே நாளில் ஓகே சொல்லிவிட்டேன்: முதலில் தீபக் தான் என்னிடம் காதலைச் சொன்னார், அவர் காதலைச் சொன்ன விதமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதாவது என்னுடைய வங்கிக் கணக்கில் இவ்வளவுதான் பணம் உள்ளது. நான் அதிகம் கோபப்படுவேன். படம் இல்லாவிட்டால் நாம் கண்டிப்பாக கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும். ஆனால் நான் இருக்கும் வரை உன்னை நன்றாக பார்த்துக் கொள்வேன். உன்னை திருமணம் செய்து உன்னுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என கூறினார். தீபக்கின் இந்த வார்த்தைகள் என்னை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்தது. தீபக் தனது காதலைச் சொன்ன அதே நாளில் நானும் ஓகே சொல்லி விட்டேன். அதன் பின்னர் எங்களது காதல் குறித்து என்னை வீட்டில் பேச சொன்னார். அதற்கு நாம் திருமணம் செய்து கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றேன். எங்களுடைய காதல் குறித்து குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் தெரியும். கடந்த ஆண்டே திருமணம் செய்ய முடிவெடுத்தோம்.

மாலத்தீவுக்கு அவுட்டிங்: எனது குடும்பம் மஸ்கட்டில் இருப்பதால் இருவரும் அங்கு அடிக்கடி செல்வோம். இது மட்டும் இல்லாமல் திருமணத்திற்கு முன்பு பாலி, மாலத்தீவு ஆகிய இடங்களுக்கு ஒன்றாக அவுட்டிங் சென்றுள்ளோம். அதே நேரத்தில் அவுட்டிங் செல்லும்போது நாங்கள் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை வெளியிடாமல் பார்த்துக் கொண்டோம். நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் அவுட்டிங் செல்கிறோம் என்ற தகவல் வெளியே வராமல் கூடுமானவரை பார்த்துக்கொண்டோம். நாங்கள் கவனமாக இருந்தும் ஒரு முறை ஒரு யுடியூப்பர் ஒருவர் நாங்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்களை வைத்து வீடியோ வெளியிட்டார். ஆனால் அது பெரும்பாலும் யாருடைய கவனத்தையும் ஈர்க்காததால் எங்கள் காதல் பலருக்கு தெரியாமலே போய்விட்டது எனக் கூறியுள்ளார். காதலில் வெற்றி பெறுவதும் அதனை திருமணம் வரை கொண்டு செல்வது என்பது அனைத்து காதலர்களாலும் முடிவதில்லை. இப்படியான நிலையில் தீபர் பரம்பொலுக்கும் அபர்ணா தாஸ்க்கும் அவர்களது திருமண வாழ்க்கை சிறக்க வாழ்த்துகள்.



Click it and Unblock the Notifications











