ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பிரபுதேவா படம்.. வெளியானது புது படத்தின் போஸ்டர்!
சென்னை: சினிமாவில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்னரே நடன இயக்குநராக பணியாற்றி பல சிக்னேட்சர் ஸ்டெப்புகளை போட்டவர் பிரபுதேவா. கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான இந்து படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதே ஆண்டு வெளியான காதலன் படத்திலும் கதாநாயகனாக நடித்தார். அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். குறிப்பாக ரோமியோ, மின்சார கனவு, வானத்தைப்போல, நாம் இருவர் நமக்கு இருவர், ஜேம்ஸ் பாண்ட், சார்லி சாப்ளின் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இவரது அசாத்திய நடனத் திறமையால் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் ,வட இந்திய சினிமாவிலும் என ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலிம் புகழ்பெற்றவராக விளங்கினார். இதன் காரணமாக இவரை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் ரசிகர்கள் புகழ்ந்தனர்.

மின்சார கனவு படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் நடன இயக்குனராகவும் பணியாற்றினார். அதில் ஸ்ட்ராபெரி கண்ணே பாடலுக்கும் வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கும் சிறப்பாக நடனம் அமைத்ததற்காக தேசிய விருதை வென்றார். கமல்ஹாசன் போன்ற சினிமாவை கரைத்துக் குடித்த நடிகரோடு காதலா காதலா படத்தில் அட்டகாசமாக வாய் பேசுவதில் சவாலை எதிர்கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் பலரது பாராட்டையும் குவித்திருந்தார்.
இயக்குநர் பிரபுதேவா: நடிகர், நடன இயக்குனர் மட்டுமல்லாமல் 2005 ஆம் ஆண்டு பிரபுதேவா தெலுங்கில் நுவ்வோஸ்தானந்தே நேனோடந்தனா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது மேலும் ஏழு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு இந்த படம் ரிலீஸ் ஆனது. சிறந்த நடன இயக்குனர் உள்ளிட்ட ஒன்பது ஃபிலிம் ஃபேர் விருதுகளை இப்படம் வென்றது. இயக்குநராக பிரபுதேவா தனது முதல் படத்திலேயே மாஸ் வெற்றியை பெற்றதால் படங்கள் இயக்குவதிலும் அவர் அதிக கவனம் செலுத்தினார். குறிப்பாக தமிழில் போக்கிரி வில்லு எங்கேயும் காதல் போன்ற பல படங்களையும் இயக்கியுள்ளார். இதில் போக்கிரி மிக பிரம்மாண்ட வெற்றியை பிரபு தேவாவிற்கு ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தியிலும் 10 படங்கள் இயக்கியுள்ளார்.
டான்ஸில் கிங்: இவரது நடனம் இந்திய அளவில் மிகப்பெரிய ஈர்ப்பை ஈர்த்ததால் பல நடிகர்கள் இவரது நடனத்திற்கு ஈடு கொடுத்து நடிக்க முடியாமல் திணறினர். ஆனால் ஒவ்வொரு நடிகருக்கும் சிக்னேச்சர் ஸ்டெப்புகளை உருவாக்குவதில் கைதேர்ந்தவராக பிரபுதேவா இருந்ததால் அவரையே வேறு வழியில்லாமல் தங்களது படங்களில் நடன இயக்குனராக புக் செய்தனர்.
நயன்தாரா காதல் விவகாரம்: வில்லு படத்திற்கு பின்னர் பிரபுதேவா நயன்தாரா இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஒன்றாக வெளிநாடு செல்வது, ஒன்றாக விழாக்களில் கலந்து கொள்வது என தங்களது காதலை வளர்த்து வந்தனர். ஆனால் பிரபு தேவா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் இவர்களது காதல் விவகாரம் ஊடகங்களில் மிகப்பெரியதாக கவனம் பெற்றது. நயன்தாரா பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள தனது மதத்தையும் மாற்றிக்கொண்டார். மேலும் பிரபுதேவாவின் பெயரை தனது கைகளில் பச்சை குத்திக் கொள்ளவும் செய்தார். பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என நயன்தாரா முடிவெடுத்து இருந்தார். ஆனால் இவர்கள் காதல் திருமணத்திற்கு முன்பாகவே முடிவை சந்தித்ததால் நயன்தாரா மீண்டும் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
புது படத்தின் போஸ்டர்: அதேபோல் பிரபு தேவாவும் படங்களுக்கு நடனம் அமைப்பது, படங்களில் நடிப்பது, படங்களை இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பிரபுதேவா விஜயின் தி கோட் படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் பிரபு தேவாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மூன் வாக் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் போஸ்டர் இன்று அதாவது ஜூன் மாதம் 19 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. பிகைண்ட்வுட்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நிஷ்மா செங்கப்பா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மனோஜ் இயக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











