எவ்வளவு தான் தாங்குவார்: முருகதாஸை பார்த்தால் பாவமாவே தெரியலையா?
மும்பை: தர்பார் படத்தின் ஸ்டில்கள் மீண்டும் கசிந்துள்ளன.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தர்பார். மும்பையில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஜெய்பூர் சென்ற படக்குழு தற்போது மீண்டும் மும்பைக்கு திரும்பியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்துவிட்டன. அந்த புகைப்படங்களில் ரஜினிகாந்த் காக்கி உடையில் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு நிற்கிறார். நயன்தாரா கருப்பு நிற உடையில் முதுகை காண்பித்தபடி நிற்கிறார்.
தர்பார் படத்திற்காக முருகதாஸ் என்று போட்டோஷூட் நடத்தினாரோ அதில் இருந்து இன்று வரை புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்ந்து கசிந்து கொண்டே இருக்கின்றன. இப்படி தன் உழைப்பு வீணாகப் போவதை தடுக்க அவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எல்லாம் எடுத்தும் ஒன்றும் நடக்கவில்லை.
ரஜினி அல்லது முருகதாஸை கடுப்பேற்ற படக்குழுவை சேர்ந்த யாரோ தான் இந்த கசிவு வேலையை பார்ப்பதாக பேசப்படுகிறது. முன்னதாக முருகதாஸ் ரஜினியின் சில புகைப்படங்களை வெளியிட்டபோது அதுவாக கசியும் முன்பு நாமே வெளியிடலாம் என்ற பயத்தில் அவர் அப்படி செய்ததாக கூறப்பட்டது.
சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுக்கிறோம் என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், இந்த கசிவு பிரச்சனையால் கவலையுடன் இருக்கிறார் முருகதாஸ். அந்த கருப்பு ஆடு யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
தர்பார் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து அதன் கதை, கலைஞர்கள் பற்றி வெளியான செய்திகளை விட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிவு குறித்து வெளியான செய்திகள் தான் அதிகம். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடக்கும்போதாவது எதுவும் கசிந்துவிடாமல் பார்த்துக் கொண்டால் தான் தர்பாருக்கு நல்லது.


Click it and Unblock the Notifications











