அய்யோ இன்னும் கொஞ்சம் இருந்திருந்தால் அபிநய் பிழைத்திருப்பாரே.. எல்லாமே கைகூடி வந்துச்சு.. ச்ச கொடுமை
சென்னை: துள்ளுவதோ இளமை பட நடிகர் அபிநய் நேற்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். அதனையடுத்து அவரது உடல் ஏவிஎம்மில் தகனம் செய்யப்பட்டது. உறவினர்கள் யாரும் பெரிதாக வராத நிலையில் கலக்கப்போவது யாரு பாலா உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த சிலரும், நண்பர்களும் அவருக்கான இறுதி நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தினார்கள். சினிமாவில் வெற்றிக்காக போராடிய அபிநய் கடைசிவரை அதை ருசிக்காமலேயே சென்றிருப்பது சோகத்துக்குரிய ஒன்று.
சினிமா ஒரு மாய உலகம். அது எப்போது ஒருவரை தூக்கிவிடும், எப்போது ஒருவரை அதள பாதாளத்துக்கு கொண்டு செல்லும் என்று யாராலும் கணிக்க முடியாது. முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதர் கண்டுகொள்ள ஆளில்லாமல் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்ததும் இங்கு நடந்திருக்கிறது, சாதாரண நடத்துநராக இருந்த ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாரானதும் இங்கு நடந்திருக்கிறது. இதில் அபிநய் தியாகராஜ பாகவதர் லிஸ்ட்டில் வருவார்.
பெரிய நம்பிக்கை: தனுஷுடன் துள்ளுவதோ இளமை படத்தில் அபிநய் நடித்ததை பார்த்தபோது அப்போதைக்கு பலரின் கண்களும் அவர் மீதுதான் இருந்தது. அனைவரையும் ஈர்க்கும் அழகு, நல்ல நடிப்பு என சினிமாவுக்கு தேவைப்படும் அத்தனையும் இருந்தது. கண்டிப்பாக பெரிய ஆளாக வருவார் என்று கணிக்கப்பட்டது. அவருக்கு அப்படத்துக்கு பிறகு வாய்ப்புகள் வரத்தான் செய்தன. ஆனால் வந்த வாய்ப்புகள் எதுவும் வெற்றியாக மாறவில்லை.

ஒதுங்கிய அபிநய்: தொடர்ச்சியாக சில தோல்விகளை சந்தித்த பிறகு ஒட்டுமொத்தமாக அவரை ஒதுக்கியது சினிமா. அதன் காரணமாக கிடைத்த வேலைகளை எல்லாம் செய்தார். அவர் ஆட்டோ ஓட்டியதாகவும் ஒரு தகவல் உண்டு. ஒருகட்டத்தில் எல்லோரும் அவரை மறந்த சூழலில் வெளியான புகைப்படம் கலங்கடிக்க செய்தது. அதனையடுத்து கலக்கப்போவது யாரு பாலா, தனுஷ் உள்ளிட்டோர் தங்களால் முடிந்த உதவிகளை செய்தார்கள்.
உயிரிழந்த அபிநய்: அந்த உதவிகள் சோர்ந்திருந்த அபிநய்க்கு கொஞ்சம் தெம்பை கொடுத்தது. எப்படியாவது கல்லீரல் நோயிலிருந்து மீண்டுவிடலாம், சினிமாக்களில் நடிக்க தொடங்கிவிடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் எதிர்பார்க்காதவிதமாக நேற்று தான் குடியிருந்த வாடகை வீட்டில் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த செய்தியை கேள்விப்பட்ட பாலா உள்ளிட்டோர் விரைவில் வந்து அடுத்தடுத்து நடக்க வேண்டிய விஷயங்களை கவனித்தார்கள். அபிநய் உடல் ஏவிஎம்மில் தகனம் செய்யப்பட்டது.
ஆபரேஷன் நடந்திருக்கும்: இந்நிலையில் அபிநய்யின் இறுதி காலத்தை தெரிந்த ஒரு பெண்மணி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "கிட்டத்தட்ட சீக்கிரமே அவருக்கு அறுவை சிகிச்சை நடந்திருக்க வேண்டியது. 3 வருடங்களாக அவருக்கு இந்த பிரச்னை இருக்கிறது. இரவுதான் மருத்துவமனையிலிருந்து வந்தார். வந்தவுடன் எனக்கு மூச்சு விடுவதில் சிரமமாக இருக்கிறது என்று அட்டென்டரிடம் சொல்லியிருக்கிறார். சாப்பாடும் கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடுவதாக சொல்லியிருக்கிறார். பிறகு 4 மணிக்கு டயாப்பர் மாற்றுவதற்காக அட்டென்டர் வந்து பார்த்தபோதுதான் அவர் தூக்கத்திலேயே இறந்திருப்பது தெரிந்தது. கடந்த ஜூன் மாதத்தில்தான் அவருடைய அப்பா இறந்தார். தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் எல்லாம் அவருக்கு உதவி செய்தார்கள்தான்" என்றார்.


Click it and Unblock the Notifications











