பணம், கணவருக்காக கொள்கையை தளர்த்திய தீபிகா படுகோனே
மும்பை: 83 படத்தில் பாதி மனதுடன் நடிக்க ஒப்புக் கொண்டார் தீபிகா படுகோனே என்று பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.
1983ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து கோப்பையை வென்றது கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி. இதை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் பாலிவுட் படம் 83.

கபீர் கான் இயக்கும் இந்த படத்தில் ரன்வீர் சிங் கபில் தேவாக நடிக்கிறார். 83 படத்தில் ரன்வீர் சிங்கின் மனைவியாக அவரின் நிஜ மனைவியான தீபிகா படுகோனே நடிக்கிறார்.
என் மனைவியை விட வேறு யாரு எனக்கு மனைவியாக நடிக்க ஏற்றவராக இருப்பார் என்று ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருபவர் தீபிகா. இந்நிலையில் அவர் 83 படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
தீபிகா படப்பிடிப்பு தளத்தில் தன்னை பேட்டால் அடித்தபோது எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ரன்வீர் சிங்.
இந்நிலையில் 83 பட தயாரிப்பாளர்களுக்கு நெருக்கமான ஒருவர் பிரபல ஆங்கில நாளிதழிடம் கூறியதாவது,
83 படத்தில் நடிப்பது தொடர்பாக தீபிகா முதலில் உறுதியாக இல்லை. குணச்சித்திர வேடம் என்பதால் நடிப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தார். கணவர் தான் ஹீரோ என்பதால் அவருக்காகவும், மேலும் சம்பளம் வெயிட்டாக இருந்ததாலும் நடிக்க ஒப்புக் கொண்டார் என்றார்.
83 படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடிக்கவே தீபிகாவுக்கு ரூ. 14 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தீபிகா சபாக் படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்து முடித்துள்ளார். அந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தீபிகா மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்ததாக இயக்குநர் தெரிவித்தார். சபாக் படம் மூலம் தீபிகா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.
தீபிகா படுகோனே முன்னதாக ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் ஆகிய படங்களில் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து நடித்துள்ளார். அந்த மூன்று படங்களையுமே சஞ்சய் லீலா பன்சாலி தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக கணவருடன் சேர்ந்து நடிக்கிறார் தீபிகா.


Click it and Unblock the Notifications











