தனது அம்மாவுக்கு கொரோனா..முதல்வருக்கு கோரிக்கை வைத்த டிவி நடிகை.. அவசரமாக உதவிய அரசு!
மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது அம்மாவுக்கு உதவுமாறு டிவி நடிகை வைத்த கோரிக்கையை ஏற்று, நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு அந்த நடிகை நன்றி தெரிவித்துள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகை தீபிகா சிங். இந்தி தொடர்களில் நடித்து வருகிறார். இவரும் இவரது கணவர் ரோகித்தும் மும்பையில் வசித்துவருகின்றனர்.
இவர் அம்மா, அப்பா உள்ளிட்ட குடும்பத்தினர் டெல்லியில் வசிக்கின்றனர். இவரது மெகா குடும்பத்தில் 45 பேர் உள்ளனர்.

அம்மாவுக்கு கோவிட்-19
அனைவரும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகர்கஞ்ச் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை தீபிகா சிங், தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தனது அம்மாவுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், ஆனால் மருத்துவமனை அதற்கான பரிசோதனை முடிவுகளைத் தர மறுப்பதாகவும் புகார் கூறியிருந்தார்.

உடனடியாக உதவி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இதற்கு உடனடியாக உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். கோவிட்-19 பரிசோதனை முடிவு இல்லையென்றால் தனது அம்மாவை, மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது என்பதால் தனக்கு உடனடியாக உதவ வேண்டும் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.

பரவும் ஆபத்து
45 பேரை கொண்ட பெரிய குடும்பம் என்பதால், அம்மாவை வீட்டில் தனிமைப்படுத்துவது ஆபத்து என்றும் அப்படி செய்தால், எல்லோருக்கும் பரவும் ஆபத்து இருப்பதாகவும் கூறியிருந்தார். பிரதமர் மோடியையும் தனது பதிவில் டேக் செய்திருந்தார். கூடவே தனது வீட்டு முகவரி, அம்மா, அப்பா பற்றிய விவரங்கள், தனது கணவரின் போன் நம்பர் உள்ளிட்டவற்றை தெரிவித்திருந்தார்.

டெல்லி அரசு
இதையடுத்து அவரது அம்மாவுக்கு டெல்லி அரசு உதவி செய்துள்ளது. இதுபற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள தீபிகா சிங், என் அம்மாவுக்கு டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதி கிடைத்துவிட்டது. எனது கோரிக்கைக்கு உடனடியாக செவி சாய்த்த டெல்லி அரசுக்கும் சுகாதரத்துறை அமைச்சருக்கும் நன்றி' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications