நெப்போலியன் கொடுத்த புகார்.. மகன் தனுஷ் தொடர்பான வீடியோக்கள்.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்
சென்னை: நடிகர் நெப்போலியனின் மூத்த மகனான தனுஷுக்கு கடந்த வருடம் அக்ஷயா என்கிற பெண்ணோடு திருமணம் நடந்தது. ஜப்பானில் பிரமாண்டமாக நடைபெற்ற அந்தத் திருமணத்தில் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். தற்போது தனுஷும், அக்ஷயாவும் நல்லபடியாக வாழ்க்கையை வாழ்ந்துவரும் சூழலில்; ஒருதரப்பினர் தனுஷின் உடல்நிலை மீது அவதூறு பரப்பினார்கள். பொறுத்து பொறுத்து பார்த்த நெப்போலியன் சமீபத்தில் காவல் துறையில் புகார் அளித்தார்.
தமிழ் சினிமாவில் 90களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் கலக்கியவர் நெப்போலியன். எந்தக் கதாபாத்திரம் கிடைத்தாலும் அதில் தனது நடிப்பில் பட்டையை கிளப்புபவர். ஹீரோ, வில்லன் மட்டுமின்றி குணசித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கிய அவர் ஒருகட்டத்தில் நடிப்பிலிருந்து ஒதுங்கி அவ்வப்போது மட்டுமே நடித்துவந்தார். இதற்கிடையே அரசியலிலும் குதித்த அவர் மத்திய இணையமைச்சராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.
அமெரிக்காவுக்கு சென்ற நெப்போலியன்: சூழல் இப்படி இருக்க அவருக்கு தனுஷ், குணால் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருந்தது அவருடைய பத்தாவது வயதில் தெரியவந்தது. தொடர்ந்து மகனை சரியாக்க இந்தியாவில் பல சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்தார் நெப்போலியன். ஆனால் இங்கு ஒத்து வராததால் தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்று செட்டிலாகிவிட்டார் அவர்.

மகனுக்கு தேவையான அனைத்தும் உண்டு: அமெரிக்காவுக்கு சென்ற அவர் தனது மகனை பத்திரமாக பார்த்துவந்தார். மேலும் அங்கு ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கிய அவர், ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி விவசாயமும் செய்துவருகிறார். அதேபோல் தேவையான சிகிச்சையும் உயர் தரத்தில் தனுஷுக்கு கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். மகன் மீது அவர் வைத்திருக்கும் பாசத்தை பலரும் பாராட்டிவருகிறார்கள்.
மகனுக்கு திருமணம்: தனக்கு பிறகு மகனுக்கு ஒரு துணை வேண்டும் என்று நினைத்த நெப்போலியனும் அவரது மனைவியும் தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து; அக்ஷயா என்கிற பெண்ணை பார்த்தார்கள். இரண்டு பேருக்கும் ஜப்பானில் கடந்த வருடம் திருமணம் நடந்தது. இதில் குஷ்பூ, ராதிகா, கலா மாஸ்டர், சரத்குமார், பாண்டியராஜன் என பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டது. திருமண ஏற்பாடுகள் எல்லாம் தடல் புடலாக அமைந்தது.
சுமூகமான வாழ்க்கை: திருமணத்துக்கு பிறகு தனுஷும், அக்ஷயாவும் தங்களது வாழ்க்கையை காதலோடு நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். தனக்கு இந்தத் திருமணத்தில் சம்மதம் இருந்ததன் காரணமாகத்தான் ஒத்துக்கொண்டேன் என்று அக்ஷயாவும் தெரிவித்தார். ஆனால் ஒருதரப்பினரோ தனுஷால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாது; அக்ஷயாவின் வாழ்க்கையை நெப்போலியனும் அவரது மனைவியும் சீரழித்துவிட்டார்கள் என்றெல்லாம் இஷ்டத்துக்கு அவதூறு பரப்பி பேசிக்கொண்டிருந்தார்கள்.
நெப்போலியன் புகாரும்; போலீஸின் நடவடிக்கையும்: அவ்வாறு மற்றவர்கள் பேசியதற்கு பொறுத்து பொறுத்து பார்த்த நெப்போலியன் காவல் துறையில் புகார் அளிக்க முடிவு செய்தார். அதன்படி அவர் தரப்பிலிருந்து மருத்துவர் ஒருவர் நெல்லை எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்தப் புகாரின் அடிப்படையில் தனுஷ் மீது அவதூறு பரப்பும்படியான வீடியோக்களை யூடியூபிலிருந்து அகற்றும் நடவடிக்கையில் நெல்லை மாவட்ட காவல் துறை இறங்கியிருக்கிறது. அதுமட்டுமின்றி அந்த வீடியோக்களை பதிவேற்றிய பக்கங்கள் குறித்தும் அதன் உரிமையாளர் குறித்தும் தகவல்களை திரட்டும் பணியிலும் மும்முரமாக ஈடுபட தொடங்கியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











