Jana nayagan: 500 கோடி முதலீடு அம்போ தானா?.. ஓவர்சீஸில் பலத்த அடிவாங்கப்போகும் ஜன நாயகன்!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் நாளை மறுநாளுக்குள் தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? என்கிற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
எச் வினோத் இயக்கிய 'ஜனநாயகன்' படத்தில் விஜய் நடித்துள்ளார். அப்படம் ஜனவரி 9 ந் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதப்படுத்தியதால், தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு போட்டது. இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. இதில், சென்சார் போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது மத்திய அரசின் முடிவல்ல. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது.படத்தில் பாதுகாப்புப் படையின் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் அது குறித்து ஆலோசனை பெற வேண்டி உள்ளது. மேலும், ஜனநாயகன் படத்துக்கு எதிராக புகாரளித்தவர் தணிக்கைக் குழு உறுப்பினர் தான். சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்த பின்பும், மறு ஆய்வுக்கு அனுப்ப தணிக்கை குழுவிற்கு அதிகாரம் உள்ளது என்றார்.

ஜனநாயகன் : இதைத்தொடர்ந்து படக்குழு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், பெரும்பான்மையான உறுப்பினர் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரை செய்துள்ளனர். பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும். ஆனால், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். இதில் உள்நோக்கம் உள்ளது என வாதிட்டார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, பி.டி.ஆஷா, தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் நாளை மறுநாளுக்குள் அதாவது ஜனவரி 9ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்குவதாக உத்தரவிட்டார்.
பெருத்த நஷ்டம்: இதனால், ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அப்படம் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாக வில்லை என்றால் படக்குழு பெரும் நஷ்டத்தை சந்திக்கும். ஜனநாயகன் படம் அமெரிக்காவில் 50,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளும், இங்கிலாந்தில் 70,000 டிக்கெட்டுகளும், மலேசியாவில் 200,000 டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. படம் வெளியாகவில்லை என்றால், பணத்தை திரும்ப வழங்கப்பட வேண்டியிருக்கும். ஏனெனில், இந்த சந்தைகளில் உள்ள திரையரங்கு நிறுவனங்களால் ஏற்கனவே முன்பதிவுகளை புதிய தேதிகளுக்கு மாற்ற முடியாது இது படக்குழுவிற்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும். இதனால், தயாரிப்பு நிறுவனம் பெரும் சிக்கலில் சிக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











