தமிழ் திரையுலகம் மறக்க முடியாத கருப்பு தினம் இன்று! #DeMoDisaster
நேர்மை, கருமை, எருமை என ரைமிங்காக சொல்லிக் கொண்டிருந்தாலும், தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை காசேதான் கடவுளடா. அங்கு எந்த கணக்கில் பணப் பரிமாற்றம் நடக்கிறதென்று அந்தக் கடவுளுக்கும் தெரியும்.
சினிமாவுக்கு பைனான்ஸ் பண்ணும் மார்வாடிகள், லோக்கல் பைனான்ஸியர்கள் நல்ல கணக்கில் தருவது குறைவு. வேறு வேறு வழிகளில் பணம் புரளும் தொழில் இது. எல்லாவற்றையும் கணக்கில் காட்டவும் முடியாது. அப்படி செய்தால் இந்த தொழிலில் எதுவும் மிஞ்சாது. இதுதான் யதார்த்த நிலை.

அப்படி இருந்த சினிமா தொழிலை ஒரேயடியாக முடக்கிப் போட்டது பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு. வெளியில் சிலர் அதற்கு ஆதரவு காட்டினாலும் உள்ளுக்குள் புழுங்கித் தவித்தனர். மன்சூர் அலிகான் போன்ற நடிகர்கள்தான் பகிரங்கமாக இந்த பணமதிப்பிழப்பை எதிர்த்தனர். கடுமையாக விமர்சித்தனர்.
கையில் எப்போதும் ரொக்கம் வைத்திருக்கும் பல நடிகர்கள், பைனான்சியர்கள், தயாரிப்பாளர்கள் அதை எப்படி மாற்றுவது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நின்றார்கள். ஆனால் எப்படியோ சமாளித்தார்கள்.
ஆனால் பெருமளவு பாதிக்கப்பட்டவர்கள் சினிமா தொழிலாளர்கள்தான். இவர்களுக்கு சம்பளமும் பழைய பணத்தில் தரப்பட்டது. இருந்த சேமிப்புப் பணத்தையும் மாற்ற வேண்டி வந்தது. சிறுகச் சிறுக சேர்த்த பணத்தை டெபாசிட் செய்தால், அடுத்த ஒரு வாரத்தில் வருமான வரித்துறை நோட்டீல் அனுப்பி இம்சித்தது.
பல படப்பிடிப்புகள் முடங்கிப் போயின இந்த பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நான்கைந்து நாட்களில். அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் ஆகின.
தமிழ் திரையுலகுக்கு இந்த பணமதிப்பிழப்பு மறக்க முடியாத கருப்பு தினம். மக்களாவது தங்கள் கஷ்டங்களை வெளியில் சொன்னார்கள். ஆனால் சினிமாக்காரர்களால் மெல்லவும் முடியவில்லை, விழுங்கவும் முடியவில்லை. அத்தனை இம்சை அனுபவித்தார்கள்.


Click it and Unblock the Notifications











