அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த சூரியின் காளை.. சூரி வரவில்லையானு கேட்ட உதயநிதி!
மதுரை: பொங்கல் காலகட்டத்தில் தொடங்கி, சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுவது வாடிக்கையான ஒன்றுதான். இதில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆகும். இதில் நடிகர் சூரியின் காளை பங்கு பெற்றது. ஜல்லிக்கட்டினைக் காண வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சூரி வரவில்லையா எனக் கேட்டார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியைத், துணை முதலமைச்சரும் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்மாபாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவருடன் அமைச்சர் மூர்த்தி இருந்தார். மேலும் உதயநிதியின் மகன் இன்பநிதியும் போட்டியை நேரில் காண வந்திருந்தார்.

காலை 7 மணிக்குத் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைக்க, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மகன் இன்பநிதியுடன் மதுரைக்கு வந்துள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் ஆயிரம் வீரர்கள் களமிறங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் 1000க்கும் மேற்பட்ட காளைகளுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பிலும், தமிழ்நாடு அரசு சார்பிலும் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், நடிகர் சூரியின் காளை களமிறக்கப்பட்டது. வழக்கமாகவே இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் சூரியின் காளை களமிறங்கி வருவது வழக்கமான ஒன்றுதான். நன்கு திடகாத்திரமான அவரது மயிலைக் காளையை வீரர்கள் நெருங்குவதற்கே தயங்குகின்றார்கள் என்பது கள நிலவரமாக உள்ளது.

சூரி எங்கே: இப்படியான நிலையில் அவரது காளை, இன்று ஜல்லிக்கட்டில் களமிறக்கப்பட்டது. அப்போது மைக்கில் சூரியின் காளை என சொல்லப்பட்டது. இதைக் கேட்டதும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தியிடம், சூரி கலந்து கொள்ளவில்லையா எனக் கேள்வி கேட்டார். அதற்கு அமைச்சர் மூர்த்தி, சூரி வரவில்லை எனக் கூறினார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் வாடிவாசலில் சீறிப்பாய்ந்த சூரியின் காளையை ஒருவரும் பிடிக்க முடியவில்லை. இந்தக் காளையின் பெயர் ராஜாக்கூர் கருப்பன்.

சூரி பொங்கல்: நடிகர் சூரி நேற்று தனது குடும்பத்தினர் மற்றும் சொந்த பந்தங்களுடன் இணைந்து தனது வீட்டில் கோலாகலமாக பொங்கல் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டகிராமில் வீடியோவைப் பகிர்ந்தார். இது மட்டும் இல்லாமல், "குடும்பத்திற்குள்
விட்டுக்கொடுங்கள்' அன்புகாட்டுங்கள் ! அனுசரித்துப் போங்கள் ! இந்தக் குடும்பத்தில் ஒருவனாக நிற்பதே என் கொடுப்பினை கூடுவோம்... கொண்டாடுவோம்! இது எங்கள் வீட்டுப் பொங்கல்.." என வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











