தேசிய தலைவர் படம் எப்படி இருக்கு?.. தேவராக நடித்த பஷீரின் மகள் சொன்ன விமர்சனம் இதோ
சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து தேசிய தலைவர் என்ற படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தை ஊமை விழிகள் படத்தின் இயக்குநர் அரவிந்தன் இயக்கியிருக்கிறார். சத்யா என்பவர் தயாரிக்க இளையராஜா இசையமைத்திருக்கிறார். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று படமானது திரையரங்குகளில் ரிலீஸாகியிருக்கிறது. இந்நிலையில் படத்தில் பசும்பொன் தேவராக நடித்திருக்கும் பஷீரின் மகள் படம் குறித்து ஃபில்மிபீட் தமிழுக்கு பேசியிருக்கிறார்.
தேசியமும் தெய்வீகமும் இரண்டு கண்கள் என்று முழங்கி அதற்கேற்றவாறு செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். சுதந்திர போராட்டத்தில் சுபாஷ் சந்திர போஸின் வழியை பின்பற்றியவர் அவர். குறிப்பிட்ட சமுதாயத்தினர் அவரை தெய்வத்துக்கு நிகராக மதித்து கொண்டாடுகிறார்கள். அவரது பிறந்தநாள், இறந்தநாளை முன்னிட்டு பசும்பொன்னுக்கு படையெடுத்து அவரது சமாதிக்கு சென்று குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமின்றி பலரும் சென்று மரியாதை செலுத்துவார்கள்.
இன்று தேவர் ஜெயந்தி: இன்று தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அதனையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், சீமான் என பலரும் மரியாதை செலுத்தினார்கள். நடிகரும், தவெக தலைவருமான விஜய் வழக்கம்போல் பனையூரில் இருக்கும் தனது அலுவலகத்தில் தேவரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேசிய தலைவர் திரைப்படம்: இதற்கிடையே அவரது வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து தேசிய தலைவர் என்ற திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதனை சத்யா என்பவர் தயாரித்திருக்கிறார். விஜயகாந்த்தை வைத்து ஊமை விழிகள் படத்தை இயக்கிய அரவிந்த்ராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். முத்துராமலிங்க தேவராக பஷீர் நடித்திருக்கிறார்.
இன்று ரிலீஸ்: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று படமானது திரையரங்குகளில் வெளியானது. பலரும் தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்த்து ரசித்தார்கள். இந்நிலையில் பஷீரின் மகளும் லண்டனிலிருந்து வந்து சென்னையில் படம் பார்த்தார். படம் பார்த்துவிட்டு ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், 'நேற்று முன்தினம்தான் லண்டனிலிருந்து வந்தேன். இந்தப் படம் ஐந்து வருடங்களாக எடுத்தார்கள்.
மக்களுக்கு பிடிக்கும்: இந்தப் படம் மக்களுக்கு ரொம்பவே பிடிக்கும். காந்தி உள்ளிட்டோர் பற்றி நிறைய பேசுகிறோம். ஆனால் தமிழ் பேசும் சுதந்திர போராட்ட வீரர் பற்றி யாரும் பேசுவதில்லை. தேவரை நினைத்து பெருமையாக இருக்கிறது. எல்லோரும் சென்று படம் பார்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் சென்று பார்க்க வேண்டும். தேவராக எனது அப்பாவை பார்க்கும்போது ரொம்பவே மரியாதை வருகிறது. இதெல்லாம் ஒரு தொடக்கம்தான். இனி அவர் காட்டும் வழியில் செல்வோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











