விநாயகனே வினை தீர்ப்பவனே.. தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்ட பிள்ளையார் பாடல்கள் தெரியுமா?.. செம வைப்
சென்னை: இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஃபேமஸான பண்டிகைகளில் ஒன்று. வடமாநிலங்கள் முதல் தென் மாநிலங்கள்வரை விநாயகரை வழிபட்டு; அந்த சிலையை தண்ணீரில் கலப்பதுவரை நிகழ்ச்சி களைகட்டும். சூழல் இப்படி இருக்க தமிழில் கொண்டாடப்பட்ட விநாயகர் பாடல்கள் சிலவற்றை பார்க்கலாம்.
இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி ரொம்பவே பிரபலமானது. வட மாநிலங்களில் எல்லாம் இந்த நிகழ்ச்சி களைகட்டும். அங்கு மட்டுமின்றி பெரும்பாலும் இந்தியா முழுவதுமே இந்த நிகழ்ச்சி விமரிசையாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடவுளுக்கென்று பலகாரங்கள் படைத்து; விநாயகரை வழிபட்டு தங்களது வாழ்க்கையில் நடக்காத விஷயங்கள் எல்லாம் நடக்க வேண்டுமென்று வேண்டி கொள்வார்கள்.
இந்த வருட விநாயகர் சதுர்த்தி: ஆகஸ்ட் 27ஆம் தேதி இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவிருக்கிறது. தண்ணீரில் கரைப்பதற்காக நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகளும் மும்முரமடைந்திருக்கின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு ஏகப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருக்கிறது. சூழல் இப்படி இருக்க தமிழ் ரசிகர்கள் அதிகம் கொண்டாடிய விநாயகர் பாடல்கள் சிலவற்றை பார்க்கலாம்.
விநாயகனே வினை தீர்ப்பவனே: பக்தி பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல் இது. கோயில்கள், இல்லங்கள், விசேஷங்கள் என எதுவாக இருந்தாலும் இந்தப் பாடல் கண்டிப்பாக ஒலித்துவிடும். உளுந்தூர்பேட்டை சண்முகம் என்பவர் இந்தப் பாடலின் வரிகளில் விநாயகரை பற்றிய புகழ்ச்சியை அவ்வளவு அழகாக வைத்திருப்பார். இந்தப் பாடல்தான் தமிழ்நாட்டில் எத்தனை விநாயகர் பாடல்கள் வந்தாலும்; முன்னோடியான பாடல்.

மகா கணபதி: அதேபோல் சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி நடித்த அமர்க்களம் படத்தில் இடம்பெற்றிருக்கும் மகா கணபதி பாடல். கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருந்த அந்தப் பாடல்; இந்தக் காலத்தின் நடைமுறைகளை பேசினாலும்; பாடலின் முதல் வரியை விநாயகர் பெயரை சொல்லி ஆரம்பித்திருந்தார் கவிஞர். முக்கியமாக, 'இதை கேட்க வந்த சாமிகூட ஆத்தில் கரையுது' என பிள்ளையாரை நீரில் கரைப்பதையும் போகிறபோக்கில் அசால்ட்டாக சொல்லி சென்றிருப்பார் வைரமுத்து.
வீர விநாயகா பாடல்: இவை தவிர்த்து அஜித் நடித்து உருவான வீரம் படத்தில் வீர விநாயகா பாடல் என்ற பாடலும் ஃபேமஸ்தான். பல வருடங்கள் கழித்து ஒரு பாடல் முழுவதும் விநாயகரின் பெருமைகளையும், அவரை போற்றும் விதமாகவும் வரிகள் வந்தது என்றால் அது இந்தப் பாடலில்தான். இப்பாடலை விவேகா எழுதியிருந்தார். பாடலின் ஒவ்வொரு வரியிலும் பிள்ளையார் மீதான பக்தி வழிந்தோடும். இப்படி ஏகப்பட்ட பாடல்கள் தமிழ்நாட்டில் விநாயகருக்கென்று இயற்றப்பட்டு கொண்டாடப்படுகின்றன.


Click it and Unblock the Notifications











