ஆண்களுக்கு சாராய பாட்டு.. பெண்களுக்கு பக்தி பாட்டு! - தேவா சொல்லும் ஐடியா
சென்னை: ஆண்களைக் கவர சாராயப் பாட்டும், பெண்களைக் கவர பக்திப் பாட்டும் போடணும்... அப்போதுதான் பெண்கள் அதிக அளவு தியேட்டர்களுக்கு வருவார்கள் என்றார் இசையமைப்பாளர் தேவா.
ஜோதி விநாயகர் சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பாக "மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா" படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இசைத் தட்டை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையை வெளியிட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் பெற்றுக்கொண்டார்.

டிபி கஜேந்திரன்
இயக்குனரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் பேசும்போது, "பெண்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வந்து நீண்ட நாட்களாகி விட்டது தியேட்டர்களில் "ஹவுஸ்புல்" என்று போர்டு போடுவதும் அரிதாகி விட்டது. அதனால் மக்களை கவர கோவில், ஹோட்டல், திருமண மண்டபம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஐம்பது, நூறு இருக்கைகள் கொண்ட தியேட்டர்கள் கட்ட வேண்டும் அப்போதுதான் தியேட்டரில் ஹவுஸ்புல் போர்டு தொங்க ஆரம்பிக்கும்," என்றார்.

இசையமைப்பாளர் தேவா
படத்தின் இசையமைப்பாளர் தேவா பேசுகையில், "தியேட்டருக்கு பெண்கள் வருவதில்லை என்ற குறை நிறையவே இருக்கிறது. ஆண்களைக் கவர குத்துப் பாட்டு, சாராய பாட்டு என நாம் வைக்கிறோம். அதில் கவரப்பட்டு ஆண்கள் படம் பார்க்க வருகிறார்கள்.

பெண்களைக் கவர
பெண்களை கவர பக்தி படங்களும் பக்தி பாடல்களும் வேண்டும். பெண்கள் வந்தால் தான் குடும்பமே வரும் ஹவுஸ்புல் போர்டு தொங்கும், வசூல் இருக்கும். குத்துப் பாட்டு, சாராயப் பாட்டை நானும் என் படங்களில் போட்டு இருக்கிறேன். இதை இன்றைய இயக்குனர்கள், இசையமைப்பாளர்களுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன்," என்றார்.

கேயார்
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் பேசுகையில், "மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும். இது மாதிரி படங்கள் வெற்றி பெறும்போது நாம் செய்த பாவங்கள் குறையும்," என்றார்.
இந்த விழாவில் பட அதிபர்கள் டி.சிவா, விஜயமுரளி, ராதாகிருஷ்ணன், ஜெயபால் சுவாமி நடிகர் விஜய்சேதுபதி,டெல்லி கணேஷ், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இயக்குனர் பாலாஜி தரணிதரன் ஆகியோரும் பேசினார்கள்.


Click it and Unblock the Notifications











