Devayani Home Tour: ஸ்விட்ச் போட்டா வீட்டுக்குள் மழை வரும்.. தேவயானி பண்ணை வீட்ல இவ்ளோ வசதியா?
சென்னை: டைரக்டர் ராஜகுமாரனை நடிகை தேவயானி கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. விஜய், அஜித், கமல்ஹாசன், விஜயகாந்த், பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
சீயான் விக்ரமுடன் அவர் நடித்த விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை ராஜகுமாரன் இயக்கி இருந்தார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காதல் காரணமாக திருமணம் செய்து கொண்டனர். ராஜகுமாரன் மற்றும் தேவயானி தம்பதியினருக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர். சென்னையில் பிரம்மாண்டமாக ஒரு வீடு உள்ள நிலையில், சொந்த ஊரான ஈரோட்டில் உள்ள அந்தியூரில் பண்ணை வீடு ஒன்றும் உள்ளது.

பண்ணை வீடு: அந்தியூர் கிராமத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் ராஜகுமாரன் மற்றும் தேவயானிக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று உள்ளது. சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலில் தனது பண்ணை வீட்டை இயக்குநர் ராஜகுமாரன் சுற்றி காண்பித்துள்ள ஹோம் டூர் வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
ஸ்விட்ச் போட்டால் மழை பெய்யும்: வெயில் காலத்திலும் மழை வேண்டுமா எங்க வீட்டில் தாராளமாக பெய்யும் என மேஜிக் காட்டுவது போல ஸ்விட்ச் போட்டால் பண்ணை வீட்டுக்கு நடுவில் மழை கொட்டும் அளவிற்கு செயற்கையாக பைப்புகள் மூலம் செய்துள்ள செட்டப் வியக்க வைக்கிறது. மதிய வேளையில் வீட்டில் அதிக வெயில் அடிக்கும் சமயத்தில் ஜாலியாக மழையை போட்டு குளிர்ந்த காற்று வாங்கி குடும்பத்துடன் கொண்டாடுவோம் என அசால்ட்டாக சொல்லிச் செல்கிறார் ராஜகுமாரன்.

ஐந்து பெட்ரூம் வீடு: கோடை விடுமுறை நாட்களில் சொந்த பந்தங்களுடன் பண்ணை வீட்டுக்கு வந்து விடுவோம் என்றும் அனைவரும் தங்குவதற்கு ஏற்றவாறு ஐந்து பெட் ரூம்கள் இந்த வீட்டில் இருக்கின்றன என்கிறார் ராஜகுமாரன்.
சந்தன மரம், கொய்யா மரம்: வீட்டைச் சுற்றி சந்தன மரங்களும் பீட்ரூட் கொய்யா மரங்கள் நடப்பட்டுள்ளன. அவற்றையும் வரிசையாக காட்டி இயற்கைச் சூழலில் வாழ்வது தனக்கு ரொம்பவே பிடிக்கும் என்றும் விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய் படத்தில் தேவயானி கேட்டதும் கொய்யா பழம் கையில் வந்து விழுவது போல இங்கேயும் இந்த பீட்ரூட் கொய்யா வந்து விழும் என சிரித்துக் கொண்டே கூறிச் செல்கிறார்.

மகள்களுக்கு சரிபாதி: ஒரு பக்கம் பெரிய மகள் இனியாவின் புகைப்படத்துடன் அவர் வரைந்த ஓவியங்கள் ஃபிரேம் போட்டு மாட்டப்பட்டு உள்ளன. இன்னொரு பக்கம் இளையமகள் பிரியங்காவின் புகைப்படத்துடன் அவர் வரைந்த ஓவியங்கள் ஃபிரேம் போட்டு மாட்டி வைக்கப்பட்டுள்ளன.
கரையான் அரிக்காத பூஜை அறை: சென்னையில் உள்ள வீட்டில் தேக்கு மரத்திலான பூஜை அறை உள்ளது. ஆனால் இது கிராமம் என்பதால் கரையான் அரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் அதன் மூலம் எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக பிளாஸ்டிக் உட்டில் பூஜை அறையை தயார் செய்திருக்கிறேன். காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை சூரியன் நேரடியாக பூஜை அறையின் மீது விழுவது போன்ற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என அதையும் காட்டி வியக்க வைக்கிறார்.


Click it and Unblock the Notifications











