விஜய் பையன்தான் ஹீரோ.. மகள்தான் ஹீரோயின்.. கதையெல்லாம் ரெடி.. சர்ப்ரைஸ் கொடுத்த தேவயானி கணவர்
சென்னை: தேவயானியின் கணவர் ராஜகுமாரன் சில படங்களை இயக்கிவிட்டு திருமணம் செய்த பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார். இடையில் நடிகராக தலை காட்டிய அவர்; இப்போது அதிகம் பேட்டிகளை கொடுத்துவருகிறார். அந்தப் பேட்டிகள் வரவேற்பை பெறாமல் விமர்சனத்தையும், கிண்டல்களையும்தான் சந்தித்துவருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடன் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
விக்ரமனின் உதவி இயக்குநரான ராஜகுமாரன் நீ வருவாய் என படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அஜித், பார்த்திபன், தேவயானி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அடுத்ததாக விக்ரம், சரத்குமார், தேவயானி, குஷ்பூ உள்ளிட்டோரை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கினார். அதுவும் பெரிய வரவேற்பை எல்லாம் பெறவில்லை. அதேசமயம் அந்தப் படத்திலிருந்துதான் ராஜகுமாரன் - தேவயானி காதல் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்தது என்று சொல்லலாம்.
திருமணம் செய்துகொண்ட ஜோடி: தேவயானியை ராஜகுமாரன் காதலிக்கிறார் என்று தகவல்கள் வெளியானபோது ஒட்டுமொத்த திரைத்துறையும் ஆச்சரியம்தான் பட்டது. மேலும் தேவயானியின் குடும்பமோ இந்தக் காதலுக்கு துளிக்கூட சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் எதையும் யோசிக்காத தேவயானி வீட்டை விட்டு வெளியே வந்து ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மொத்தம் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

மகளும் ஃபேமஸ்: அவர்களின் மூத்த மகள் பெரிதாக கேமரா முன்பு தோன்றாமல் இருந்தாலும்; இரண்டாவது மகளான இனியா தனியார் சேனல் ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு புகழடைந்தார். தனியார் ஊடகம் சார்பில் அவருக்கு சமீபத்தில் விருது ஒன்றும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது ஒருபக்கம் இருக்க விரைவில் அவர் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும்; அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது.
ட்ரோலை சந்திக்கும் ராஜகுமாரன்: இதற்கிடையே யூடியூப் சேனல்களுக்கு அதிகம் பேட்டிகள் கொடுத்துவரும் ராஜகுமாரன்; ஒரு பேட்டியில் இயக்குநர் மகேந்திரன், நடிகர் கமல்ஹாசன் பற்றி பேசிய விஷயம் பெரிய ட்ரோலை சந்தித்தது. அளவுக்கு அதிகமாக ட்ரோல்களை சந்தித்த பிறகு தான் பேசிய கருத்தையே கொஞ்சம் மாற்றி பேசினார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியிருக்கும் விஷயம் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.
என்ன பேசினார்?: அவர் அந்தப் பேட்டியில் பேசுகையில், "நீ வருவாய் என படத்துக்கான இரண்டாம் பாக கதையை கிட்டத்தட்ட முடித்துவிட்டேன். விஜய் பையன் ஜேசன் சஞ்சய்தான் ஹீரோ. என் மகள் இனியாதான் ஹீரோயின். தேவயானியும் இப்படத்தில் இருப்பார். அவர் ஏன் என்றால் முதல் பாக கதையை நினைவுப்படுத்துவதற்குத்தான். அவர் லைனில்தான் இந்தக் கதையும் நடக்கும். விஜய்தான் என் இயக்கத்தில் நடிக்கவில்லை; அவரது மகனாவது நடிக்கட்டுமே" என்றார்.


Click it and Unblock the Notifications











