கூலி பெயரே தப்பு.. வேறு மாதிரி கிண்டல் செய்வாங்க.. அங்க சுத்தி இங்க சுத்தி ரஜினியிடம் வந்த தேவயானி கணவர்
சென்னை: தேவயானியின் கணவரும், நடிகருமான ராஜகுமாரன் கடந்த சில நாட்களாக கொடுக்கும் பேட்டிகளில் தனது இஷ்டத்துக்கு பேசி வைக்க; அவை அனைத்துமே ட்ரோலுக்கு உள்ளாகியிருக்கின்றன. பலரும் அவரை துவைத்துவருகிறார்கள். ஆனால் அதை பற்றி அவர் கவலைப்படுவதாக தெரியவில்லை. இந்நிலையில் ரஜினி நடித்த கூலி படத்தை பற்றி பேசியிருப்பதும் ட்ரோல் ஆகியிருக்கிறது.
நீ வருவாய் என படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான ராஜகுமாரன் மொத்தமே ஐந்து படங்களுக்குள்தான் இயக்கியிருப்பார். அவற்றில் எதுவும் சூப்பர் ஹிட்டோ அல்லது மெகா ஹிட்டோ இல்லை. முதல் படத்தை இயக்கியபோதே அதில் ஹீரோயினாக நடித்த தேவயானியை காதலித்தார். அந்தக் காதலை அடுத்து கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு ஒரு படத்தை மட்டுமே இயக்கினார்.
நடிகராக ராஜகுமாரன்: ஒருகட்டத்தில் இயக்கத்தை விட்டு முழுவதுமாக ஒதுங்கிய ராஜகுமாரன் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், கடுகு உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் கடுகு திரைப்படத்தில் அவரது கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. அதேசமயம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் காமெடி ரோலை ஏற்றார். ஆனால் அவரை அந்தப் படத்தில் அப்படி பயன்படுத்தியது தனக்கு வருத்தம் என்று தேவயானி பின்நாட்களில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ராஜகுமாரன் பேட்டி: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு அவர் கொடுத்திருந்த ஒரு பேட்டியில், 'ராம நாராயணன் 100 படங்களுக்கு மேல் செய்திருக்கிறார். ஆனால் ஒன்று இரண்டு படங்கள் இயக்கிய மகேந்திரனை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். ஆனால் நான் மகேந்திரனின் ஒரு படத்தைக்கூட பார்த்ததில்லை. அவர் படங்களை பார்ப்பதற்கு எனக்கு விருப்பமுமில்லை.
அதில் என்ன இருக்கிறது?: சமீபத்தில்தான் உதிரிப்பூக்கள் படம் பார்த்தேன். அதில் ஒன்றும் பெரிதாக இல்லை. ஒரு சாதாரண படம் அவ்வளவுதான். கிழக்கே போகும் ரயில் படத்தில் ஒரு பிட்டு கதைதான் அந்த ஒட்டுமொத்த படமும். மனைவியின் தங்கையை தன் மனைவியாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் முழு பட கதையே. இது ஒரு பெரிய விஷயமா?.. அதற்காகவா இரண்டரை மணி நேரம்?" என்று தெரிவித்திருந்தார்.
இப்போதைய பேட்டி: மகேந்திரன் பற்றி அப்படி பேசியிருந்தது கடுமையான ட்ரோலை சந்தித்தது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூலி படம் பற்றி பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "ரஜினி படத்துக்கு கூலி என்று டைட்டில் வைக்கிறார்கள். அது தவறான டைட்டில். ஒருவருக்கு படம் பிடிக்கவில்லை என்றால் படத்தின் பெயரை எப்படி கிண்டல் செய்வார் என்று கொஞ்சம் யோசிக்க வேண்டும். வேறு மாதிரி சொல்வார். அபப்டி நாம் சொல்ல விடவேகூடாது. நீ வருவாய் என, புது வசந்தம் என்று பெயர் வைத்தால் அதை கிண்டல் செய்ய முடியாது" என்றார்.


Click it and Unblock the Notifications











