Nizharkudai Review: தேவயானியின் நிழற்குடை.. படம் எப்படி இருக்கு.. படத்தில் அப்படி என்ன இருக்கு!
சென்னை: நீண்ட நாட்களுக்கு பின் தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் நிழற்குடை. நேற்று தியேட்டரில் வெளியான இந்த படத்தில், விஜித், கண்மணி, இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, நீலிமா இசை, அஹானா, தர்ஷன் சிவா என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பொதுமக்கள் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
குடும்ப உறவுகளை மையமாக வைத்து இயக்குநர் சிவா ஆறுமுகம், நிழற்குடை படத் இயக்கி இருக்கிறார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா, அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில், பேசிய நடிகை தேவயானி, நிழற்குடை அழகான கருத்துள்ள படம், இன்றைய இளம் பெற்றோர்களுக்கு தேவையான விஷயம் இந்த படத்தில் இருக்கிறது. முதியோர் இல்லங்கள் இந்த காலத்தில் அதிகரித்து இருக்கிறது. அது குறையவேண்டும் என்றால், பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல விஷயத்தையும், குழந்தைகளுக்காக சின்ன சந்தோஷத்தையும் சேர்த்து வைக்க வேண்டும் அப்படிப்பட்ட கருத்தை சொல்லும் படம் தான் நிழற்குடை. இந்த படத்தை ஒரே ஒரு காட்சி மட்டும் போட்டு விட்டு எடுத்துவிடாமல், பெரிய படத்திற்கு கொடுப்பது போல, சின்ன படத்திற்கு ஆதரவு கொடுத்தால், இதுபோன்ற சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெறும் என்றார்.

படத்தின் கதை: விஜித் - கண்மணி தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையை கவனித்துக்கொள்ள முடியாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருகிறது. இதனால், குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக தேவயானியை வேலைக்கு சேர்க்கிறார்கள். தேவயானியின் அன்பு மற்றும் அக்கறையால் குழந்தையும் அவரிடம் பாசத்தோடு இருக்கிறாள். இந்த நேரத்தில் தான், விஜித் மற்றும் கண்மணி தம்பதிக்கு அமெரிக்காவில் குடியேற விசா கிடைக்கிறது. குழந்தை மீது அதிக பாசம் கொண்ட தேவயானி குழந்தையை பிரிவதை நினைத்து வேதனை அடைகிறாள். இந்த சூழ்நிலையில், குழந்தை திடீரென்று காணாமல் போக, அமெரிக்கா பயணத்தை தடுக்க யாரோ சதி செய்கிறார்கள் என நினைக்கும் குழந்தையின் பெற்றோர், சிலர் மீது புகார் அளிக்கிறார்கள். அதன்படி, அவர்களை போலீஸ் விசாரிக்கிறது. இதில் குழந்தை கிடைத்ததா.. இல்லையா.. குழந்தையின் நிலை என்ன ஆனது என்து தான் படத்தின் கதை.
நல்ல படம்: நேற்று தியேட்டரில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படம் பார்த்த ஒருவர், ஒவ்வொருத்தரும் இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டும். நான் நிறைய திரைப்படங்களை பார்த்து இருக்கிறேன். என் மனதை நிழற்குடை திரைப்படம் கரைய வைத்துவிட்டது. இதில், தேவயானி சிறப்பாக நடித்து உள்ளார். ஊர் ஊராக சுற்றி, கோடி கோடியாக சம்பாதிப்பது வாழ்க்கை இல்லை, பெற்ற குழந்தையை அரவணைத்து வளர்ப்பது தான் வாழ்க்கை என ஒரு நல்ல கருத்தை படத்தில் சொல்லி இருக்கிறார்கள் உண்மையில் இந்த படத்தை பெற்றோர் அனைவரும், தங்கள் குழந்தைகளுடன் வந்து பார்க்க வேண்டும் என்றார்.
படம் பார்த்த மற்றொரு பெண், குழந்தையை கவனிக்கவில்லை என்றால், என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதை இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது. தேவயானி இந்த படத்தில் நல்ல ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிளைமாக்ஸ் காட்சி நல்ல இருந்தது, படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. குடும்பத்தோடு இந்த படத்தை அனைவரும் வந்து பார்க்கலாம் என்றார்.


Click it and Unblock the Notifications











