தேவயானிக்கு தேர்தலில் சீட்.. அந்தக் கட்சியில் வாய்ப்பு இல்லை.. ராஜகுமாரன் அதிரடி.. புதுசா கிளப்புறாரே
சென்னை: நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்துகொண்ட ராஜகுமாரன்; சமீபமாக தான் கொடுக்கும் பேட்டிகளில் அதிரடியான விஷயங்களை பேசி ட்ரெண்டாகிவருகிறார். இயக்குநர் மகேந்திரன், நடிகர் கமல்ஹாசன் பற்றி பேசியது ட்ரெண்டானாலும் அவருக்கு கண்டனங்களை பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கும் விஷயமும் அதிரடியாக இருக்கிறது.
விக்ரமனிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு நீ வருவாய் என படத்தை இயக்கிய ராஜகுமாரன்; அந்தப் படத்தின்போது நடிகை தேவயானியை காதலிக்க ஆரம்பித்துவிட்டார். தேவயானியும் காதலிக்க; இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். இந்தத் திருமணத்தை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமும் ஆச்சரியப்பட்டது. திருமணத்துக்கு பிறகு பெரிதாக படங்கள் எதுவும் இயக்காமல் ஒதுங்க ஆரம்பித்தார்.
ராஜகுமாரன் பேட்டி: இடையில் சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லுக்கு ஆயுதம், விஜய் மில்டனின் கடுகு உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் வீட்டில் ஒரு தோட்டத்தையும் பராமரித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க சில வாரங்களுக்கு முன்பு அவர் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அந்தப் பேட்டியில், "ராம நாராயணன் 100 படங்களுக்கு மேல் செய்திருக்கிறார். ஆனால் ஒன்று இரண்டு படங்கள் இயக்கிய மகேந்திரனை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். ஆனால் நான் மகேந்திரனின் ஒரு படத்தைக்கூட பார்த்ததில்லை. அவர் படங்களை பார்ப்பதற்கு எனக்கு விருப்பமுமில்லை.

உதிரிப்பூக்கள்: சமீபத்தில்தான் உதிரிப்பூக்கள் படம் பார்த்தேன். அதில் ஒன்றும் பெரிதாக இல்லை. ஒரு சாதாரண படம் அவ்வளவுதான். கிழக்கே போகும் ரயில் படத்தில் ஒரு பிட்டு கதைதான் அந்த ஒட்டுமொத்த படமும். மனைவியின் தங்கையை தன் மனைவியாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் முழு பட கதையே. இது ஒரு பெரிய விஷயமா?.. அதற்காகவா இரண்டரை மணி நேரம் படம்" என்றார்.
வலுத்த கண்டனங்கள்: அதுமட்டுமின்றி கமல்ஹாசன் ஒன்றும் பெரிய நடிகர் இல்லை; அவரைவிட சரத்குமார்தான் சிறந்த நடிகர் என்றும் சொல்லி வைத்தார். இப்படி அவர் இஷ்டத்துக்கு பேச; பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தார்கள். சிலர் நடிகை தேவயானிக்கே ஃபோன் போட்டு சங்கடப்பட்டதாகவும் ஒரு பேச்சு ஓடியது. அனைவரும் ரொம்பவே கிண்டல் செய்ததால் இப்படி அதிரடியாக பேசுவதை ராஜகுமாரன் குறைத்துக்கொள்வார் என்று கருதப்பட்டது.
தேர்தலில் தேவயானிக்கு சீட்டு: ஆனால் சமீபத்தில் ஒரு தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "மக்கள் நீதி மய்யம் தேவயானியை அந்தியூர் தொகுதியில் தேர்தலில் நிறுத்துவதற்கு முயற்சி செய்தது. ஆனால் எனக்கு அரசியல் தெரியும் என்பதால் அதை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. தேர்தலில் நின்று வெல்வதைவிடவும்; ஆளுங்கட்சி எம்.எல்.ஏவாக வெல்ல வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான விஷயங்களை செய்ய முடியும். நாங்கள் அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை.
சந்திக்க விரும்பிய கமல்: ஒருமுறை அந்தியூரில் வைத்து எங்களை கமல் சந்திக்க வருவதாகவும்; உங்கள் வீட்டில்தான் உணவு அருந்தப்போகிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் நாங்களோ இல்லை சார் சென்னை கிளம்பிட்டோம். சாவியை கொடுத்துவிட்டு போகிறோம். இங்கு வந்து ரெஸ்ட் எடுத்துக்கொள்ள சொல்லுங்கள் என சொல்லிவிட்டு வந்தோம். அரசியல் நிமித்தமாக அவர் எங்களை சந்திப்பதை நாங்கள் விரும்பவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலைமைதான் தவெகவுக்கும் வரும். அந்தக் கட்சியினர் எங்களை அழைத்தால் தலை கீழாக நின்றாலும் போகமாட்டோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











