வேலையில்லா பட்டதாரி போஸ்டர் விவகாரத்தில் நடவடிக்கை- டிஜிபி உறுதி
சென்னை: தனுஷ் புகைபிடிக்கும் காட்சி கொண்ட போஸ்டர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி ராமானுஜம் உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாடு புகையிலைத் தடுப்பு அமைப்பினர், வேலையில்லா பட்டதாரித் திரைப்படத்தில் தனுஷ் புகைபிடிக்கும் காட்சி கொண்ட போஸ்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிஜிபி ராமானுஜத்தைச் சந்தித்து மனு அளித்தனர். அதில்,
"தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ் புகையிலைக் கொள்கைகளுக்கு எதிராக நடந்து கொண்டுள்ளார். அதைவிட இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் எப்படி 'U' சான்றிதழ் அளித்தார்கள் என்று தெரியவில்லை. அதுமட்டுமன்றி புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர்களுக்கும் அனுமதி அளித்திருக்கிறார்கள்.
தமிழக அரசு உடனடியாக தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர்கள் மற்றும் விளம்பர பொருட்களை நீக்க வேண்டும்"

விதி மீறல்
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிகரெட்டுக்கு விளம்பரம் தருவதைத் தடுக்க வகை செய்யும் 'சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்களில் வீதிமீறலுக்கான சட்டப் பிரிவு 2003-ன் கீழ், வேலையில்லா பட்டதாரி படத்தின் மீது வழக்குப் பதிவு செய்ய முடியும்.

பள்ளிகள் முன்பு போஸ்டர்
இந்தப் போஸ்டர்கள் எங்கு பார்த்தாலும் ஒட்டப்பட்டுள்ளன, மேலும் பள்ளிகள் அருகேயும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது சிகரெட் மற்றும் பிற புகையிலைப்பொருட்கள் சட்டம் பிரிவு 5ஐ மீறுவதாக உள்ளது.

தனுஷ் மீது நடவடிக்கை
பொதுவாக திரைப்படங்களில் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் காண்பிக்கப்படும்போது உரிமைத் துறப்பு வாசகங்கள் காட்டப்படும் ஆனால் தனுஷின் வேலையில்லாப் பட்டதாரி படத்தில் அவ்வாறு உரிமைத் துறப்பு வாசகங்கள் காண்பிக்கப்படவில்லை. எனவே படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் டிஜிபியிடம் வலியுறுத்தினர்.

டிஜிபி உறுதி
அவர்களின் புகாரைப் பொறுமையாகக் கேட்ட டிஜிபி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











