எல்லா போலீஸ் அதிகாரிக்கும் இந்த தீரனைப் பிடிக்கும்! - டிஜிபி ஜாங்கிட்
சென்னை: தீரன் படம் அனைத்துப் போலீஸ் அதிகாரிகளுக்கும் பிடிக்கும் என்று தமிழக காவல் துறைத் தலைவர் ஜாங்கிட் கூறியுள்ளார்.
தீரன் அதிகாரம் ஒன்று படத்தைப் பார்த்தபிறகு டிஜிபி ஜாங்கிட் கூறுகையில், "இந்த படம் மிக அருமையாக வந்துள்ளது. உண்மையில் அந்த பவ்ரியா குழுவைப் பிடிக்கும் மிஷனுக்கு நாங்கள் தான் தலைமை வகித்தோம். எப்படி அந்த சம்பவங்கள் போலீஸ் பார்வையில் நடந்ததோ அது அப்படியே படமாக வந்துள்ளது.

நடிகர் கார்த்தியையும் இயக்குநர் வினோத்தையும் நான் ரொம்ப பாராட்ட வேண்டும். ஆரம்பம் முதல் எப்படி பவ்ரியா மிஷனை செயல்படுத்தினோம். எப்படி பத்து ஆண்டுகள் தமிழ் நாட்டில் சம்பவங்கள் செய்தார்கள் அவர்களை நாங்கள் எப்படி பிடித்தோம். அதில் இரண்டு பேரை நாங்கள் எண்கவுன்டர் செய்தோம் பதிமூன்று பேரை உயிரோடு பிடித்தோம். அதே போன்று உயர் நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை சரியான முறையில் சேர்த்து செய்துள்ளார்கள்.

இந்தப் படத்தில் காணப்படும் அனைத்தும் உண்மை. ரொம்ப கஷ்டபட்டு பவ்ரியாவுக்கு சென்று நடித்துள்ளீர்கள். கமாண்டோ பயிற்சி எவ்வளவு அளித்திருப்பார்கள் என்று நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. குதிரை சவாரி, கமாண்டோ காட்சிகளை பார்க்கையில் சமீபத்தில் வந்த சோலோ படம் போல் அருமையாக இருந்தது. பட குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அருமையான தயாரிப்பு. எல்லா காவல் துறையினருக்கும் இந்த படம் பிடிக்கும்," என்றார்.


Click it and Unblock the Notifications











