தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு.. 27ந் தேதி தீர்ப்பு.. கவலையில் ரஜினி!
சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிகள் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.இதில், கடந்த முறை இருவரும் ஆஜரான நிலையில், நவம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா அறிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் தனுஷ் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்தை தொடர்ந்து, அவர் நடித்த காதல் கொண்டேன்,புதுப்பேட்டை, தேவதையைக்கண்டேன், திருடா திருடி என இவர் நடித்த படங்கள் அனைத்து வெற்றிப்படங்களாக உருவாகி தனுஷுக்கு என்று தனி ரசிகர்கள் உருவாகினார்கள். அப்போது தான், தேவதையைக் கண்டேன் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா, தனுஷுக்கு பூங்கொத்து அனுப்பினார். அந்த நட்பு காதலாக மாறி இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

விவாகரத்து வழக்கு: இதையடுத்து, இருவரும் கடந்த 2022ம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக பிரிவதாக அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர். இவர்கள் விரைவில் சேர்ந்துவிடுவார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 7ந் தேதி விசாரணைக்கு வந்த போது, இருவரும் ஆஜராகாதால், வழக்கு விசாரணை அக்டோபர் 19ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் அன்றும் இருவரும் ஆஜராகாததால், மீண்டும் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
27ந் தேதி தீர்ப்பு: இப்படி இவர்களின் விவாகரத்து மூன்றாவது முறையாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில், நவம்பர் 21 ந் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தனித்தனியாக விசாரணைக்கு வந்தனர். அப்போது, அவர்களிடம் நீதிபதி குழந்தைகள் இருப்பதால் சேர்ந்து வாழ்வது குறித்து பரிசீலனை செய்யலாமே? என்று கேட்டுள்ளார். ஆனால், இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்துள்ளனர். இதையடுத்து, தனுஷ் - ஐஸ்வர்யா இடையேயான விவாகரத்து வழக்கின் தீர்ப்பு நவம்பர் 27ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா அறிவித்துள்ளார்.
கவலையில் ரஜினி: கடந்த சில நாட்களுக்கு முன் தனுஷ் தீபாவளி அன்று ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசியதாகவும், அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும், ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளியான நிலையில், நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகி சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என கூறியிருப்பது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











