விவாகரத்து வழக்கு.. கோர்ட்டில் ஆஜராகாத தனுஷ் - ஐஸ்வர்யா.. நீதிபதி சொன்னது என்ன!
சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே விசாரணைக்கு ஆஜராகவில்லை. இரண்டாவது முறையாக இவர்கள் ஆஜராகாததால் விவாகரத்தில் இவர்களுக்கு விருப்பம் இல்லையா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகரானார். முதல் படமே அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதையடுத்து, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, சுள்ளான், திருடா திருடி என அடுத்தடுத்த படத்தில் நடித்து தமிழ்நாட்டின் கவனிக்கப்படும் நடிகராக மாறினார்.

தனுஷ்-ஐஸ்வர்யா காதல்: இந்த நேரத்தில் தான் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, தனுஷூக்கு பூங்கொத்து அனுப்ப இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி தனுஷ்-ஐஸ்வர்யா திருமணம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் நல்ல ஜோடியாக இணைந்து வாழ்ந்து வந்தனர். மனைவி இயக்கிய த்ரி படத்தில் தனுஷே நடித்திருந்தார்.
பிரிந்தனர்: இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டு பிரிந்தனர். இது ரஜினி குடும்பத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா விரைவில் சேர்ந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து ரஜினி பலமுறை பேசியும் பிரச்ச்சனை தீராததால், இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மனுத்தாக்கல் செய்தனர்.
ஆஜராகவில்லை: இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 7ந் தேதி விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்டு அன்று விசரணைக்கு வந்த நிலையில், அக்டோபர் 7ந் தேதியும் இருவரும் ஆஜராகாததால், வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டு அக்டோபர் 19ம் தேதியான இன்று வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், இன்றும் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, நவம்பர் 2ம் தேதி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து இருப்பதாக தகவல் பரவி வரும், நிலையில் இருவருமே விசாரணைக்கு ஆஜராகாததால், கிட்டத்தட்ட அவர்கள் சேர்ந்து வாழ்வது உறுதியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











