எங்களுக்குத்தான் வேண்டும்.. தனுஷிடம் உரிமையோடு கேட்டு வாங்கிய சிவகார்த்திகேயன்.. சூப்பர் நட்பு
சென்னை: சிவகார்த்திகேயனை சினிமாவுக்கு அழைத்து வந்தவர் தனுஷ். அப்படி செய்ததோடு மட்டும் இல்லாமல் தன்னுடைய வுண்டர்பார் பிலிம்ஸ் பேனரில் எதிர்நீச்சல் படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடிக்க வைத்தார். பெரிய அன்யோன்யத்தோடு அவர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டதாக கடந்த சில வருடங்களாகவே தகவல்கள் வருகின்றன. இதனால் இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் சோஷியல் மீடியாவில் அவ்வப்போது வாக்குவாதங்களும் ஏற்படுகின்றன.
சின்னத்திரையில் சிவகார்த்திகேயனின் திறமையை பார்த்த தனுஷ்; அவரை சினிமாவுக்குள் அழைத்துவந்தார். தனது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் முக்கியமான ரோலை கொடுத்தார். அதற்கடுத்து எதிர்நீச்சல் படத்தை தயாரித்து ஹீரோவாகவும் நடிக்க வைத்தார். அதனை சிவாவும் சரியாக பயன்படுத்திக்கொண்டார். அப்போதிருந்து சிவாவுக்கும், தனுஷுக்கும் இடையே நெருக்கமான நட்பு உருவானது. அவரை தனுஷ் தன்னுடைய வீட்டில் ஒருவராகவே பார்த்தார். சிவாவும் அப்படித்தான். தனுஷ் மீது அளவு கடந்த மரியாதை கொண்டிருப்பவர்.
இரண்டு பேருக்கும் மோதலா?: ஆனால் கடந்த சில வருடங்களாக அவர்கள் இரண்டு பேருக்கும் மோதல் போக்கு நிலவிவருவதாக திரைத்துறையில் பலமாக பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. முக்கியமாக இரண்டு விஷயங்கள் இந்த பேச்சை அதிகப்படுத்தின. ஒன்று, தனுஷின் கேப்டன் மில்லர் படத்துடன் சிவாவின் அயலான் வெளியானது. இன்னொன்று, கொட்டுக்காளி படத்தின் விழாவில், 'என்னால்தான் இவர்கள் வளர்ந்தார்கள் என்று எப்போதும் நான் சொல்ல மாட்டேன்' என சிவகார்த்திகேயன் பேசியது.

ரசிகர்களுக்குள் வாக்குவாதம்: அயலான் படமும், கேப்டன் மில்லரும் ரிலீஸானபோது; வேண்டுமென்றே தனுஷுக்கு போட்டியாக எஸ்கே படத்தை இறக்குகிறார் என பேச்சுக்கள் எழுந்தன. அதேபோல் கொட்டுக்காளி பட விழாவில் சிவா பேசியதை வைத்து, அவர் மறைமுகமாக தனுஷைத்தான் தாக்குகிறார் என குரல்கள் கேட்டன. ஆனால் எஸ்கே திட்டமிட்டு எதையும் செய்வதில்லை; அதிலும் தனுஷை அவர் எதிரியாக நினைத்ததே இல்லை; வேண்டுமென்றே சிலர் இப்படி கிளப்பிவிடுகிறார்கள் என எஸ்கே ரசிகர்கள் கூற; அதை தனுஷின் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாமல் கடும் விமர்சனங்களை வைத்தது உண்டு.
இன்னமும் நட்புதான்: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கும் விழா நடந்தது. அதில் இரண்டு பேரும் கலந்துகொண்டார்கள். அப்போது தனுஷ் விருது பெறுகையில் எஸ்கே கைகள் தட்டியது; இரண்டு பேரும் அன்போடு கட்டி அணைத்துக்கொண்டது போன்ற காட்சிகள் இரண்டு பேருக்கும் இடையே இன்னமும் நல்ல புரிதல் இருக்கிறது என்பதை உணர்த்தியது. இந்நிலையில் பிரபல தொகுப்பாளரும், மிமிக்ரி கலைஞருமான ஆதவன் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஆதவனின் பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "சின்னத்திரையில் இருக்கும்போது எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஓரளவுக்கு பழக்கம் இருந்தது. பிறகு 3 படத்தில் நான் உதவி இயக்குநர். அவர் நடிகர். அப்போது இன்னும் நன்றாக பழகினோம். என்னுடைய காரில் நான், தனுஷ், சிவா போனது இனிமையான நினைவுகள். அதேபோல் அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒரு பெண் தொகுப்பாளினியை வைத்து நடத்த திட்டமிட்டிருந்தார்கள்.
நானும் சிவகார்த்திகேயனும் தனுஷிடம் சென்று; நாங்களும் தொகுப்பாளர்கள்தான். நாங்கள் இருக்கும்போது எப்படி நீங்கள் வேறு ஒரு ஆங்கரை ஃபிக்ஸ் செய்யலாம். நாங்கள்தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவோம். இது நம்ம படம். அப்படியெல்லாம் விட்டுக்கொடுக்கமாட்டோம் என உரிமையோடு சொன்னோம். தனுஷும் ஒத்துக்கொண்டார். பிறகு நானும், சிவாவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











