100 கோடி வசூல் செய்த தனுஷ் படம்... 12 வருஷம் கழித்து ரீ ரிலீஸ் ஆகும் ராஞ்சனா!
சென்னை: தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் 2013ஆம் ஆண்டு காதல் காவியமாக வெளியானது ராஞ்சனா. இப்படம் பாலிவுட்டில் தனுஷிற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. அதே படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு "அம்பிகாபதி" என்ற பெயரில் வெளியானது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில், ராஞ்சனா திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியானத் திரைப்படம் ராஞ்சனா. ஒய் திஸ் கொலை வெறி பாடல் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து ராஞ்சனா படத்தின் வழியாக பாலிவுட் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தார் தனுஷ். பாலிவுட்டில் அவர் நடித்த முதல் படமே 100 கோடி வசூல் படைத்தது. மாதவன், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்களுக்கு கிடைக்காத வரவேற்பு தனுஷுக்கு கிடைத்தது.

மனதை உருக வைத்த காதல் கதை: சிறுவனாக கங்கை ஆற்றங்கரையில் சுற்றிக் கொண்டிருக்கும் போது ஜோயா என்கிற பெண்ணைக் கண்டு அவள் மேல் காதல் கொள்வது என தொடரும் இந்த ராஞ்சனாவின் கதை. புரோகிதர் பையனாக வரும் தனுஷ் முஸ்லிம் பெண்ணான சோனம் கபூரை காதலிக்கிறார். காதல் என்றால் சாதாரண காதல் இல்லை. ஒரு சாதாரண பையனுக்கு காதல் வந்தால் என்ன செய்வானோ அத்தனையும் அவன் செய்கிறான். காதலிக்காக வாழ்ந்து இறந்து போகும் கடைசி நிமிடங்கள் வரை கண்ணீர் விட்டு கரைய வைத்த நிமிடங்களை யாராலும் மறக்க முடியாத திரை அனுபவத்தை தந்த படம் ராஞ்சனா.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை மேஜிக்: இந்தி ராஞ்சனா'வுக்கு ஒரு பெரிய விளம்பரம் கொடுத்ததே ரஹ்மானின் இசைதான். பாடல்கள் ஒவ்வொன்றும் கலக்கல் ரகம் என்றால் பின்ணனி இசையில் பிரம்மாதப்படுத்தியிருப்பார். வெளிநாட்டில் ஆடும் பாடல் காட்சிகள் இல்லை ,மிரட்டும் சண்டைக் காட்சிகள் ஏதும் கிடையாது. காசி நகரை அழகாக காட்டியிருப்பார்கள். ஹோலி பண்டிகை சார்ந்து வரும் காட்சிகள் வண்ணமயமாய் தோன்றும். இந்நிலையில், 12 வருடங்கள் கழித்து இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பை கேட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

100 கோடி வசூல்: படம் வெளியான முதல் வாரத்திலேயே ராஞ்சனா படத்திற்கான வரவேற்பு பெரிதளவில் கிடைத்தது. இந்தியில் இவரது நடிப்பை பார்த்து பிரமித்து போன உச்சக்கட்ட நடிகர்கள், தனுஷை புகழ்ந்து பேச ஆரம்பித்தனர். இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தனுஷ் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து பால்கி இயக்கத்தில் ஷமிதாப், எல்.ராய் இயக்கத்தில் அட்ராங்கி ரே படத்திலும் நடித்தார்.
மீண்டும் எல்.ராயுடன் கூட்டணி: ராஞ்சனா, அட்ராங்கி ரே படங்கள் இன்றும் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் பீல் குட் படமாக உள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள், காதல் காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மீண்டும் எல்.ராய் - தனுஷ் கூட்டணியில் தேரே இஸ்க் மெயின் என்ற படம் உருவாகி வருகிறது. இப்படம் காதலை மையப்படுத்தி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், குபேரன், இட்லி கடை என பிசியான நடிகராக வலம் வருகிறார். தற்போது அவரது இயக்கத்தில் வெளியான NEEK திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இளைஞர்கள் கொண்டாடும் படமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











