வாத்தி ரிலீஸ்.. புதிய வழியை தேர்ந்தெடுத்த தனுஷ் ரசிகர்கள்
புதுச்சேரி: வாத்தி படத்தின் ரிலீஸின்போது தனுஷ் ரசிகர்கள் செய்த செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி பாராட்டைப் பெற்றுவருகிறது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் வாத்தி. சம்யுக்தா, சமுத்திரகனி, கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படம் தமிழ் - தெலுங்கு என பைலிங்குவல் படமாக வெளியாகியிருக்கிறது. படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

கல்வியை வைத்து வியாபாரம் நடப்பதுதான் கரு
தனியார் பள்ளிகளும், தனியார் கோச்சிங் சென்ட்டர்களும் கல்வி எனும் மாணவர்களின் முக்கியமான விஷயத்தில் எப்படி தகிடுதத்தம் ஆடுகின்றன என்பதை மையமாக வைத்து வாத்தி படம் உருவாகியிருக்கிறது. தனுஷ் இதுவரை ஏற்றிடாத கதாபாத்திரமான வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனால் திரையில் தனுஷை இப்படி பார்ப்பது புதுசாக இருக்கிறதென்று பலரும் கூறுகின்றனர்.

வாத்தி பெற்றிருக்கும் கலவையான விமர்சனங்கள்
ஆனால் ஒட்டுமொத்த படமாக வாத்தி கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கிறது. இயக்குநர் தெலுங்கிலிருந்து வந்தவர் என்பதால் தெலுங்குக்கு படம் எடுப்பதா இல்லை தமிழுக்கு படமெடுப்பதா என தெரியாமல் இரண்டுக்கு படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் குழப்பியடித்துவிட்டார் என்ற விமர்சனங்கள் அதிகளவு முன்வைக்கப்படுகின்றன.

ஆட்டம் காணும் வாத்தி திரைக்கதை
முக்கியமாக படத்தின் திரைக்கதையை பலரும் விமர்சிக்கின்றனர். முதல் பாதியில்கூட அப்படி இப்படி ஓட்டிவிட்ட இயக்குநர் இரண்டாம் பாதியில் சுத்தமாக விட்டுவிட்டார். தனுஷ் என்ற மகா நடிகனுக்கு காட்சிகளும், திரைக்கதையும் எப்படியெல்லாம் அமைத்திருக்க வேண்டுமெனவும் சமூக வலைதளங்களில் விமர்சித்துவருகின்றனர்.

எதுவாக இருந்தால் என்ன ரசிகர்களின் கொண்டாட்டம்
இப்படி ஒருபக்கம் விமர்சனம் எழுந்துகொண்டிருந்தாலும் தனுஷின் ரசிகர்கள் வாத்தி படத்தை கொண்டாடிவருகின்றனர். படம் இன்று காலை வெளியானபோது தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் தனுஷ் ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அதிலும் புதுச்சேரியை சேர்ந்த தனுஷ் ரசிகர்கள் செய்த செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

ஆச்சரியப்படுத்திய நடிகர் தனுஷின் ரசிகர்கள்
புதுச்சேரியில் இன்று வாத்தி படம் ரிலீஸானபோது முதல் காட்சி பார்ப்பதற்காக ரசிகர்கள் திரையரங்கில் கூடினர். அப்போது அந்த வழியாக பள்ளி சென்ற மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு திடீரென தனுஷின் ரசிகர்கள் நோட்டு புத்தகங்களை வழங்கி நன்றாக படிக்க வேண்டுமென அறிவுரை கூறினர். அவர்களது இந்த செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











