அப்படி என்னதான் கடிதத்தில் சொன்னார் தனுஷ்?....திட்டி தீர்க்கும் ரஜினி ரசிகர்கள்
சென்னை : நடிகர் தனுஷ் திரைத்துறையில் நுழைந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையடுத்து நன்றி கூறி கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள், தனுஷை திட்டி தீர்த்து வருகின்றனர்.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனான தனுஷ். துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார்.
இந்தத் திரைப்படத்தை தனுஷின் தந்தையும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா இயக்கியிருந்தார். தனுஷின் அண்ணனான செல்வராகவன் திரைக்கதையை எழுதியிருந்தார்.

துள்ளுவதோ இளமை
துள்ளுவதோ இளமை திரைப்படம் 2002ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் ஓர் ஆபாசப் படம் என்பது போன்ற பிம்பம் உலாவியது. இதனால் தனுஷ், தனது முதல் படத்திலேயே பெருமளவில் விமர்சனத்திற்கு உள்ளனார். கேலி,கிண்டல், விமர்சனம் என அனைத்தையும் உடைத்து தள்ளிவிட்டு, காதல் கொண்டேன் படத்தில் வினோத் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.

ஹிட் படங்கள்
அதன்பின், புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, வேலையில்லா பட்டதாரி, மாரி, அனேகன், வடசென்னை போன்ற மாஸ் ஹிட் திரைப்படங்களை கொடுத்து பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என அனைத்திலும் தடம் பதித்துள்ளார்.

உணர்வுப்பூர்வமான கடிதம்
தனுஷின் இந்த 20 ஆண்டு கால திரைப்பயணத்தின் வளர்ச்சி என்பது அசுர வளர்ச்சியாக உள்ளது. இதுகுறித்து, நடிகர் தனுஷ், உணர்வுப்பூர்வமான நன்றி கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த கடிதத்தில், இந்தத் திரையுலகில் நான் என் வாழ்க்கையைத் தொடங்கி இரண்டு தசாப்தங்கள் ஆகின்றன என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நான் துள்ளுவதோ இளமை தொடங்கும் போது நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை, கடவுள் கருணை காட்டியுள்ளார். தொடர் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள் என கூறியிருந்தார்.

அப்பாவுக்கு நன்றி
அண்ணன் மற்றும் இயக்குனர் செல்வராகவனுக்கு நன்றி. என்னுள் இருக்கும் நடிகரை அடையாளம் காட்டிய என் தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு நன்றி. இறுதியாக என் அம்மாவிற்கு நன்றி, அவருடைய அன்றாட பிரார்த்தனைகள் தான் என்னைப் பாதுகாத்து என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்தது என கூறியிருந்தார்.

நன்றி மறந்துவிட்டீர்கள்
இந்த கடிதத்தில் ஒரு இடத்தில் கூட ரஜினிகாந்த் பற்றி குறிப்பிடவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள். தனுஷ் நீங்கள் சூப்பர் ஸ்டாரை மறந்துவிட்டீர்கள், நீங்கள் ரஜினியின் மருமகன் என்பதால் தான் பாலிவுட், ஹாலிவுட் பட வாய்ப்புகள் உங்கள் வீட்டுவாசல் கதவை தட்டகாரணம் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று நெட்டிசன்ஸ் கருத்துக்களை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











