தனுஷ் - ஐஸ்வர்யா சந்திப்பு முதன்முதலில் எப்படி நடந்தது; யார் காரணம் தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் தனுஷ். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவருமே டீன் ஏஜில் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க தனுஷும், ஐஸ்வர்யாவும் தங்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டுமென்று குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவை முதன்முதலில் சந்தித்தது தொடர்பாக தனுஷ் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
தனுஷ் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அவர் அறிமுகமானபோது அவரை பலரும் கிண்டல் செய்தனர். ஆனால் தனது குடும்ப சூழ்நிலை கருதியும், வென்று தனது குடும்பத்தை கரையேற்ற வேண்டும் என்பதை நினைத்தும் அமைதியாகவே அதனை கடந்து சென்றார். அடுத்ததாக அவர் நடித்த காதல் கொண்டேன் திரைப்படம் அவரை பலரிடமும் கொண்டு சேர்த்தது. முக்கியமாக அவரை கிண்டல் செய்தவர்கள் எல்லாம் கொஞ்சம் அமைதியாக ஆரம்பித்தார்கள்.

அசுர வளர்ச்சி: காதல் கொண்டேன் ஹிட்டுக்கு பிறகு தனுஷின் நடிப்பில் பல படங்கள் வெளியாகின. அவரும் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டே சென்றார். ஒருகட்டத்தில் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் அவர். மேலும் ஹாலிவுட்டுக்கும் சென்று நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக குபேரா, இளையராஜா உள்ளிட்ட படங்களும் வெளியாகவிருக்கின்றன. மேலும் இயக்குநர் அவதாரத்தையும் அவர் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம்: இதற்கிடையே ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் தனுஷ். சினிமாவுக்குள் நுழைந்தபோது எப்படி கேலிகளையும், விமர்சனங்களையும் சந்தித்தாரோ; அதேபோல் போயஸ் கார்டனுக்குள் ரஜினியின் மருமகனாக நுழைந்தபோதும் அதே கேலிகள், விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் காதல் துணையோடு அதையெல்லாம் அசால்ட்டாக கடந்துபோனார் தனுஷ். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
பிரிவு: கிட்டத்தட்ட 18 வருடங்கள் அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. என்ன நடந்ததோ தெரியவில்லை கடந்த 2022ஆம் ஆண்டு தாங்கள் பிரிவதாக இருவருமே அறிவித்தனர். இருந்தாலும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. எனவே கண்டிப்பாக இரண்டு பேரும் இணைந்துவிடுவார்கள் என்று ரசிகர்கள் நம்பினர். மேலும் அவர்களை சேர்த்துவைக்க குடும்பத்தினர் முயன்றுவருவதாகவும் தகவல்கள் வேகமாக பரவிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்து: ஆனால் தற்போது தனுஷும், ஐஸ்வர்யாவும் தங்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தனுஷ் குடும்பத்தை ரஜினி குடும்பம் அவமதித்ததை தனுஷால் மறக்கவே முடியவில்லை அதனால்தான் இந்த முடிவுக்கு அவர் சென்றதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது.
தனுஷ் பேட்டி: இந்நிலையில் ஐஸ்வர்யாவை எப்போது தான் முதன்முதலில் சந்தித்தேன் என்பது குறித்து தனுஷ் அளித்த பழைய பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதில் பேசிய அவர், "காதல் கொண்டேன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை திரையரங்கில் பார்த்துவிட்டு கிளம்புவதற்கு தயாரானேன். அப்போது அந்தத் தியேட்டரின் உரிமையாளர் வந்து ரஜினியின் மகள்கள் என்று சொல்லி ஐஸ்வர்யாவையும், சௌந்தர்யாவையும் அறிமுகம் செய்து வைத்தார்.
ஹாய் மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். மறுநாள் ஐஸ்வர்யா எனக்கு ஒரு பூங்கொத்து அனுப்பி தொடர்பில் இருக்கும்படி சொன்னார். பிறகு அடிக்கடி பேச ஆரம்பித்தோம். அது காலம் செல்ல செல்ல காதலாக மாறியது. நாங்கள் காதலிக்க ஆரம்பித்து இரண்டு வருடங்கள் கழித்து திருமணம் செய்துகொண்டோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











