விஜய்யை தொடர்ந்து.. இறக்குமதி காருக்கு வரி விலக்கு கோரிய தனுஷ்.. நாளை ஹைகோர்ட்டில் விசாரணை!
சென்னை: விஜய்யை தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி விலக்கு கோரிய வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார்.
இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அனுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது
இதையடுத்து, காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என காட்டமாக கருத்து தெரிவித்திருந்தார்.

அபராதம் விதித்த ஹைகோர்ட்
மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜய் தரப்பில் மேல் முறையீடு
நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டன. இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

நுழைவு வரி விலக்கு கோரி
இந்நிலையில், நடிகர் தனுஷும் தனது இறக்குமதி காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கு வியாழக் கிழமையான நாளை விசாரணைக்கு வருகிறது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக தீர்ப்பளித்த்து.

50 சதவீத வரியை செலுத்த உத்தரவு
இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உத்தரவிட்டது.

விஜய் வழக்கை விசாரித்த நீதிபதி
அதன் பின் இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாததால், விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். நடிகர் விஜய்யின் வரி விலக்கு கோரிய வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் தான் விசாரிக்கவுள்ளார். இதனால் இந்த வழக்கு விசாரணை எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











