என்னா ஸ்பீட்... தனுஷின் 'கர்ணன்' 90 சதவிகித ஷூட்டிங் ஓவர்... ஆனா மாஞ்சோலை கதை இல்லையாமே!
சென்னை: தனுஷின் கர்ணன் பட ஷூட்டிங், 90 சதவிகிதம் முடிந்துவிட்டது. இது மாஞ்சோலைத் தொழிலாளர்கள் கதை இல்லை என்று கூறப்படுகிறது.
பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். படத்துக்கு கர்ணன் என்று டைட்டில் வைத்துள்ளனர்.
கலைப்புலி எஸ்.தாணு, தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயண் இசை அமைக்கிறார்.

திருநெல்வேலி
மலையாள நடிகை ரஜிஷா விஜயன், தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். நடிகர் லால், காமெடி நடிகர் யோகிபாபு, '96' படத்தில் குட்டி ஜானுவாக நடித்த கெளரி கிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர். அசுரன் படத்தை அடுத்து இந்தப் படத்திலும் தனுஷ், நெல்லை வழக்கில் பேசி நடிக்கிறார். திருநெல்வேலி அருகே பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து வருகிறது.

தனுஷின் தோற்றம்
இதன் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கியது. இதில் நடிக்க உள்ளூர் இளைஞர்களுக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் ஆடிஷன் நடத்தினார். இதில் தேர்வான இளைஞர்களை தனுஷுடன் முக்கியமான கேரக்டர்களில் நடிக்க வைத்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகர் தனுஷின் தோற்றத்தை நடிகர் லால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்.

மாஞ்சோலை
அந்தப் படத்தில் தனுஷ் அப்பாவியாக, லாலின் அருகில் நிற்கிறார். யேமன், கர்ணன் என்று கேப்ஷன் கொடுத்திருந்தார் லால். இந்த போட்டோ வைரலானது. இதன் கதை மாஞ்சோலை தொழிலாளர்களை பற்றியது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், இல்லை என்று இப்போது கூறப்படுகிறது. இது, ஒரு கிராமத்துக் காகப் போராடும் இளைஞனை பற்றிய கதையாம்.

இன்னும் 10 நாட்களில்
ஷூட்டிங்கை இயக்குனர் மாரி செல்வராஜ் வேகமாக முடித்து வருகிறார். இதுவரை 90 சதவிகித படப்பிடிப்பை அவர் முடித்துவிட்டார். இன்னும் 10 நாட்களில் மொத்த படமும் முடிந்துவிடும் என்று படக்குழுத் தெரிவித்துள்ளது. மாரி செல்வராஜின் வொர்க்கிங் ஸ்டைல் பிடித்துள்ளதால், மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்க நடிகர் தனுஷ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

நீண்டு போகும் லிஸ்ட்
நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம் வெளியாக இருக்கிறது. அடுத்து மாரி செல்வராஜின் கர்ணன், கார்த்திக் நரேன் இயக்கும் படம், ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அக்ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோர் நடிக்கும் இந்திப் படம் என தனுஷின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இந்தப் படங்களுக்குப் பிறகு அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிப்பர் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











