தனுஷ் பட இயக்குநர் மரணம்.. 90ஸ் கிட்ஸுகளுக்கு ஃபேவரைட் படங்கள் கொடுத்தவர்.. திரையுலகில் அதிர்ச்சி
சென்னை: கோலிவுட்டில் 2000களில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி. இவர் மொத்தம் நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். அந்த நான்கு படங்களில் தனுஷ் நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படமும் ஒன்று. இவர் இயக்கிய படங்களில் மூன்று படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றவை. இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் நடித்த ஸ்டான்லி கடைசியாக விஜய் சேதுபதியுடன் மகாராஜா படத்தில் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் என்று புகழப்படுபவர் மகேந்திரன். அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி. சில வருடங்கள் மகேந்திரனிடம் சினிமாவை கற்றுக்கொண்ட அவர்; அடுத்ததாக ரோஜா கூட்டம், பூ, சிகப்பு மஞ்சள் பச்சை, பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சசியிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். மகேந்திரன் மற்றும் சசி ஆகியோரிடம் கிட்டத்தட்ட 12 வருடங்களாக உதவி இயக்குநராக இருந்த அவர் கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானார்.
ஏப்ரல் மாதத்தில்: அதன்படி ஸ்ரீகாந்த், சினேகா உள்ளிட்டோரை வைத்து ஏப்ரல் மாதத்தில் திரைப்படத்தை இயக்கினார். கல்லூரி கால நட்பு, காதல் உள்ளிட்டவைகளை வைத்து அந்தப் படத்தை சிறப்பாகவே இயக்கியிருந்தார். பாடல்கள், மேக்கிங் என அனைத்து ஏரியாக்களும் நன்றாக இருந்ததால் படம் சூப்பர் ஹிட்டானது. படம் வணிக ரீதியாக பெரிய ஹிட்டாகவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்படுகிறது. இன்றுவரை 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் படங்களில் ஏப்ரல் மாதத்தில் திரைப்படமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷுடன் பயணம்: ஏப்ரல் மாதத்தில் படத்துக்கு பிறகு 2004ஆம் ஆண்டு தனுஷை வைத்து புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படத்தை இயக்கினார். அந்தப் படம் தனுஷுக்கும், ஸ்டான்லிக்கும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்லும் ஒருவர் அங்கு சந்திக்கும் பிரச்னைகள் என வழக்கமான ஒன்லைன் இருந்தாலும்; சிங்கப்பூரிலிருந்து ஒரு பெண்ணுடன் சாலை மார்க்கமாக இந்தியா வருகிறார் என்கிற விஷயம் அந்த சமயத்தில் ரொம்பவே புதுமையாக இருந்தது. அந்தப் படத்துக்கு பிறகு ஸ்ரீகாந்த், மீரா ஜாஸ்மினை வைத்து மெர்குரி பூக்கள் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைதான் பெற்றது. பிறகு கிழக்கு கடற்கரை சாலை படத்தை இயக்கி தோல்வியடைந்த அவர் இயக்கத்திலிருந்து முற்றிலுமாக ஒதுங்கிவிட்டார்.
நடிகராக கலக்கிய ஸ்டான்லி: இயக்கத்திலிருந்து அவர் ஒதுங்கினாலும் சினிமாவிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கவில்லை. நடிகராக தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய அவர், பெரியார், ராவணன், நினைத்தது யாரோ, ஆண்டவன் கட்டளை, கடுகு, ஆண் தேவதை, 6 அத்தியாயம், சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக அவர் விஜய் சேதுபதியுடன் மகாராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநராக நல்ல பெயர் எடுத்ததுபோலவே நடிப்பிலும் பெற்றார்.
உயிரிழந்த ஸ்டான்லி: இந்நிலையில் அவருக்கு கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதற்காக சிகிச்சை எடுத்துவந்தார். எப்படியாவது அவர் பூரண உடல்நலம் பெற்றுவிடுவார் என்று அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் அதீத நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி ஸ்டான்லி இன்று உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை வளசரவாக்கத்தில் இருக்கும் மின் மயானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு என்ன நோய் இருந்தது என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உயிரிழப்பு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











