கோபாலபுரம்தான் பவர்ஃபுல்.. அடித்து ஆடும் தனுஷ் தந்தை.. ஊருக்கே விஜய் தளபதி.. அவருக்கு இளைய தளபதிதான்
சென்னை: தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டார் விஜய். அவர் முதலமைச்சராவார் என்று பெரும்பாலானோர் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் ஆரம்பத்திலிருந்தே கான்ஃபிடென்ஸோடு இருந்த விஜய் சொன்னபடியே செய்தும் காட்டிவிட்டார். சூழல் இப்படி இருக்க இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசிய விஷயங்கள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
தமிழ்நாடு அரசியலுக்கும் சினிமா துறைக்கும் எப்போதுமே நெருங்கிய பந்தம் உண்டு. கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் திரைத்துறையிலிருந்து வந்து மாநிலத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் வரைக்கும் வந்தார். இனிமேல் சினிமாவிலிருந்து யாருமே முதலமைச்சராகமாட்டார்கள் என்று நினைத்திருந்தபோதுதான்; 'குறுக்கே இந்த கௌஷிக் வந்தால்'என்பது போல் விஜய் வந்தார். அவர் வந்த பிறகும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குறைத்தே மதிப்பிட்டன.

ஆட்டத்தை மாற்றிய விஜய்: ஆனால் விஜய்யோ ஒட்டுமொத்தமாக ஆட்டத்தையே மாற்றிவிட்டார். ஒற்றை கட்சியாக நின்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் வாக்கு வங்கி, கூட்டணி பலம் என அத்தனையையும் பின்னுக்கு தள்ளி ஆட்சியை பிடித்தது தவெக. எதிர்முகாமில் இருந்த கட்சிகளோடு ரிசல்ட்டுக்கு பிறகு கூட்டணி வைத்து; அவர்களுக்கு அமைச்சரவையில் இடமும் கொடுத்து; தானும் முதலமைச்சராகிவிட்டார் விஜய். அவர் சி.எம் நாற்காலியில் அமர்ந்ததை இன்னமும்கூட சிலர் ஜீரணிக்க முடியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் ஒருவகையில் உண்மைதான்.
இனிமேல் விஜய்தானா?: எம்ஜிஆர் கூட கட்சி ஆரம்பித்து சந்தித்த முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால்தான் தியாகு உள்ளிட்ட சீனியர் நடிகர்கள் எல்லாம், எம்ஜிஆர் அலையைவிடவும் விஜய்க்கு அதிகம் இருந்தது என்று குறிப்பிடுகிறார்கள். அதுமட்டுமின்றி குறைந்தபட்சம் அடுத்த 15 ஆண்டுகளுக்கு விஜய்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதும் ஒருதரப்பினரின் கணக்காக இருக்கிறது. ஆனால் அதனை திமுக அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுத்துவிடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கஸ்தூரி ராஜா அதிரடி: விஜய்க்கு இன்னும் கொஞ்சம் நேரம் கொடுங்கள் என்பதும், அவர் நல்லது செய்வார் என்பதும், அவரை முதலமைச்சராக்கியிருக்கும் மக்களின் முடிவை நாம் மதிக்க வேண்டும் என்பதும் திரைத்துறையில் ஒருதரப்பினரின் கருத்தாக இருக்கிறது. சிவக்குமார், குஷ்பூ உள்ளிட்டோர் அந்த நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவரிடம் போயஸ் கார்டன் தமிழ்நாட்டின் பவர்ஃபுல்லான இடம் என தொகுப்பாளினி சுட்டிக்காட்டினார்.
கோபாலபுரம்தான் பவர்ஃபுல்: அதற்கு அவரோ, 'போயஸ்கார்டன் இல்லை. எப்போதுமே தமிழ்நாட்டின் பவர்ஃபுல் இடம் கோபாலபுரம்தான். அங்கேதான் ஒளி பிறந்தது' என்றார். மேலும், அருகே இருந்தவர்களிடம், 'இப்போ போயஸ்கார்டனுக்கு இளைய தளபதி வந்துவிட்டார் போலயே.. ஓ வரப்போகிறாரா.. வரட்டும் வரட்டும் நன்றாக இருந்தால் சரிதான்' என கூறியவர், என்னுடைய மகன்களோ, பேரன்களோ அரசியலுக்கு வரலாம். அதை நாம் கணிக்க முடியாது எனவும் ஒரே போடாக போட்டார். விஜய்யை ஊரே தளபதி என கொண்டாட; கஸ்தூரி ராஜா மட்டும்தான் இன்னமும் அவரை இளைய தளபதி என்றே அழைக்கிறார். அதை பார்த்த விஜய் ரசிகர்கள் தங்கள் அதிருப்தியையும் சோஷியல் மீடியாவில் வெளிக்காட்ட தவறவில்லை.


Click it and Unblock the Notifications
