வாத்தி பொய் சொல்லலாம் ஆனா ஏக்கர் கணக்குலெல்லாம் சொல்லக்கூடாது.. தனுஷை விடாத விமர்சனங்கள்
சென்னை: வாத்தி ஆடியோ ரிலீஸில் தனுஷ் பேசியது ஏற்கனவே விமர்சனங்களை சந்தித்திருக்கும் சூழலில் தற்போது அவரது மற்றொரு பேச்சும் விமர்சனத்தை சந்தித்திருக்கிறது.
துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகமானவர் தனுஷ். ஆரம்பத்தில் அவரது உருவத்தை வைத்து பலரும் பலவாறு விமர்சனங்கள் செய்தனர். ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத அவர் தனது திறமையின் துணையோடு வளர் ஆரம்பித்தார். செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்த காதல் கொண்டேன், புதுப்பேட்டை படங்கள் அவரது தொடக்க காலத்துக்கு பெரிதும் உதவின. அதேபோல் இயக்குநர் பாலுமகேந்திராவும் தனுஷை வைத்து அது ஒரு கனாக்காலம் படத்தை இயக்கியபோது; இவ்வளவு சிறிய வயதிலேயே பாலுமகேந்திரா படத்தில் நடிப்பதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம் என கோலிவுட்டே ஆச்சரியப்பட்டது.

தேசிய விருதுகளை அள்ளிய தனுஷ்
தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த தனுஷ் ஒருகட்டத்தில் வெற்றிமாறனுடன் கூட்டணி வைத்தார். இந்தக் கூட்டணி எவர்க்ரீன் கூட்டணியாக இன்றுவரை திகழ்கிறது. இருவரது கூட்டணியில் முதலில் வெளியான பொல்லாதவன் படம் கமர்ஷியலாக உருவாகியிருந்தாலும் அதில் தனுஷின் நடிப்பு அவ்வளவு எதார்த்தமாக இருக்கும். அதனையடுத்து இருவரும் இணைந்து ஆடுகளம் படத்தை கொடுத்தனர். மதுரையில் நடக்கும் சேவல் சண்டைகளையும், அதனை சுற்றி நடக்கும் ஈகோவையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமின்றி 5க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. அதில் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.

பாலிவுட்டுக்கு சென்ற தனுஷ்
இப்படி கோலிவுட்டில் கலக்கிய தனுஷ் அடுத்ததாக பாலிவுட்டுக்கு சென்றார். பொதுவாக இங்கிருந்து பாலிவுட் செல்லும் ஹீரோக்கள் நிலைக்க முடியாது என்ற பேச்சு எப்போதும் உண்டு. ஆனால் அதனையெல்லாம் தவிடுபொடியாக்கினார் தனுஷ். அங்கு அவர் நடித்த ராஞ்சனா, ஷமிதாப் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்றன. இதன் மூலம் தனுஷ் பாலிவுட்டிலும் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வர ஆரம்பித்தார். அதுமட்டுமின்றி பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டுக்கும் தனுஷ் சென்றதை பார்த்து ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் ஆச்சரியம்தான் பட்டது.

திருச்சிற்றம்பலம் படம் கொடுத்த வெற்றி
இப்படி கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பறந்து பறந்து நடிக்கும் தனுஷ் கடந்த சில வருடங்களாக ஒரு வெற்றிக்காக காத்திருந்தார். அந்த வெற்றி மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் உருவான திருச்சிற்றம்பலம் படம் மூலம் அவருக்கு கிடைத்தது. அந்த வெற்றியை எப்படியாவது தொடர வேண்டுமென முடிவெடுத்த தனுஷ் பார்த்து பார்த்து கதைகளை தேர்ந்தெடுத்துவருகிறார்.

வாத்திக்கு காத்திருக்கும் தனுஷ்
அந்தவகையில் தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படமானது நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் ஆசிரியர் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார். அவருடன் சம்யுக்தா, சமுத்திரகனி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். கல்வி வணிகமயமாவதை அடிப்படையாக வைத்து படம் உருவாகியிருக்கிறது. படத்தை பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர் ஒருவர் வாத்தி படத்தை ஏகத்துக்கும் புகழந்திருக்கிறார்.

தொடர் சர்ச்சைகளில் வாத்தி தனுஷின் பேச்சு
படம் நாளை வெளியாகவிருக்கும் சூழலில் வாத்தி படத்தின் ஆடியோ ரிலீஸில் தனுஷ் பேசியதுதான் ஹைலைட்டாக இருக்கிறது. முதலில் டியுஷன் விவகாரம் குறித்து தனுஷ் பேசியது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாணவர்களை தனுஷ் தவறாக வழிநடத்துகிறார் என ஆசிரியர்கள் முதல் சமூக நல ஆர்வலர்கள்வரை கண்டனம் தெரிவித்தனர். தற்போது வாத்தி ஆடியோ ரிலீஸில் தனுஷின் மற்றொரு பேச்சும் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது.

பொய் சொல்லலாம் ஆனா ஏக்கர் கணக்குலெல்லாம் சொல்லக்கூடாது
அதாவது அந்த ஆடியோ ரிலீஸில் பேசிய தனுஷ், "நான் பள்ளிக்கூடம் படிக்கும்போது அப்பா, அம்மா ஃபீஸ் கட்டிவிடுவார்கள் என ஜாலியாக திரிந்தேன். ஆனால் இப்போது என் மகன்களுக்கு பள்ளிக்கூட ஃபீஸ் கட்டும்போதுதான் அந்த கஷ்டம் தெரிகிறது" என்றார்.
இந்தப் பேச்சைக் கேட்ட சமூக வலைதளவாசிகள், "தனுஷ் எப்படியும் பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குவார். அதுமட்டுமின்றி அவர் திருமணம் செய்திருப்பது ரஜினியின் மகளை. இவர்கள் இருவரும் இப்போது பிரிந்துவிட்டாலும் இருவரிடமும் வசித்துவருகிறார்கள் யாத்ராவும், லிங்காவும்.
அப்படி இருக்கும்பட்சத்தில் இருவரின் தாத்தாவும் இந்தியாவிலேயே நம்பர் 1 சூப்பர் ஸ்டார். எனவே அவர் ஃபீஸ் கட்டமாட்டாரா. அப்படியே இல்லாவிட்டாலும் பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் தனுஷ் சில லட்சங்கள் ஃபீஸாக கட்டுவதற்கா கஷ்டப்படுவார். பொய் சொல்லலாம் ஆனா ஏக்கர் கணக்குல சொல்லக்கூடாது என கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











