எதுக்கு உங்களுக்கு டைரக்ஷன் எனக் கேட்ட எஸ்.ஜே.சூர்யா! அது என்னை மிகவும்..மனம் திறந்த தனுஷ்
சென்னை: தனுஷின் 50வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடிக்கவும் செய்திருந்தார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று அதாவது ஜூலை 6ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் பேசிய தனுஷ் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக எஸ்.ஜே. சூர்யாவுடனான தனது அனுபவம் குறித்து இங்கு காணலாம்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ராயன் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் தனுஷின் 50வது படம் என்பதால் அவரே இந்தப் படத்திற்கான கதையை எழுதி இயக்கியும் உள்ளார். இந்த படத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், வரலஷ்மி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ராயன் படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகின்றது.

இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியதாவது, " முதல் படத்தில் நடிக்கும் பொழுது, நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று ஒருபோதும் நினைக்கவே இல்லை. அவ்வளவு கிண்டல்கள், கேலிகள், அவமானங்கள், உருவக்கேலிகள், துரோகங்களை தாண்டி இங்கே உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அதற்கு ரசிகர்களாகிய நீங்கள் கொடுக்கும் கரவொலிதான் முக்கிய காரணம். ஒல்லியாக, கருப்பாக, இருந்த இருந்த என்னை, எப்படி நீங்கள் உங்களோடு கனெக்ட் செய்துகொண்டீர்கள் என்று தெரியவில்லை.
திட்டுவேன்: காளிதாஸ், சந்தீப், துஷாரா அபர்ணா ஆகியோரை படப்பிடிப்புத் தளத்தில் நான் பயங்கரமாக திட்டி, கஷ்டப்படுத்தி இருக்கிறேன். இன்னு சொல்லப்போனால் டார்ச்சர் செய்து வேலை வாங்கி இருக்கிறேன் என்றுதான் கூறவேண்டும். ஆனால் நான் அப்படி நடந்துகொண்டது எல்லாம் அவர்களுக்கு ஒரு நல்ல இடத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டும்தானே தவிர, வேறு எந்த காரணமும் இல்லை.

எதுக்கு டைரக்ஷன்: எஸ்.ஜே. சூர்யா சாரைப்பொறுத்தவரை முதல் நாள் அவருக்கு நான் முதல் ஷாட்டை வைத்தபோது, நீங்கள் எதற்காக டைரக்ட் செய்கிறீர்கள் தனுஷ் என்று கேட்டார். உடனே முதல் நாளே இப்படி கேட்கிறீர்களே சார் எனக் கேட்டேன். அதற்கு அவர், இவ்வளவு பெரிய ஸ்டாராக இருக்கிறீர்கள், உங்களுக்கு என்ன மாபெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போதும் எதற்காக டைரக்ஷன் என்று கேட்டார். ஆனால் அந்த வார்த்தை என்னை பயங்கரமாக உழைக்க வைத்தது.

பிரபுதேவா: எஸ்.ஜே. சூர்யா சார் மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த ஒரு மிகப்பெரிய இயக்குநர். இருப்பினும் படப்பிடிப்புத் தளத்தில் நான் என்ன சொன்னாலும், என்ன கேட்டாலும், முகம் சுழிக்காமல் அவர் எனக்காக செய்து கொடுத்தார். பிரபுதேவா சாரை பொறுத்த வரை, அவருக்கு நான் நன்றி சொன்னால் பிடிக்காது. அவர் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் போல. ஆனாலும் அவருக்கு நன்றி.
செல்வராகவன்: ஒன்றுமே தெரியாமல் இருந்த என்னை நடிகன் ஆக்கியது என்னுடைய அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன்தான். அவர்தான் என்னுடைய ஆசான், குரு எல்லாமே. எனக்கு கிரிக்கெட் சொல்லிக் கொடுத்தது, சாப்பிட சொல்லி கொடுத்தது, வாழ்க்கையில் போராட சொல்லிக் கொடுத்தது எல்லாம் அவர்தான். கண்ணம்மா பேட்டையில் ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த என்னை இன்று போயஸ் கார்டனில் உட்கார வைத்திருப்பதும் என்னுடய அண்ணன் செல்வராகவன்" என தனுஷ் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.


Click it and Unblock the Notifications











