வாத்தி தனுஷ் பேச்சு.. சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்கள்
சென்னை: வாத்தி இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியதற்கு பலரும் கண்டனங்களை சமூக வலைதளங்களில் எழுப்பிவருகின்றனர்.
தனுஷ் கடைசியாக நடித்த படம் திருச்சிற்றம்பலம். மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கிய அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. அந்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் இருக்கிறார் தனுஷ். இதனயடுத்து அவர் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்திருக்கிறார். சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ளார்.

பிப்ரவரி 17ல் ரிலீஸாகும் வாத்தி
படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கல்வி வணிகமயமாவதை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படமானது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக காதலிக்க கைடு இல்லை பாடல் பலரால் முணுமுணுக்கப்படுகிறது. படமானது பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

வாத்தி ஆடியோ ரிலீஸில் தனுஷின் பேச்சு
வாத்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு சமீபத்தில் நடந்தது. இதில் தனுஷ் தனது தாய் மற்றும் மகன்களுடன் கலந்துகொண்டார். அந்த விழாவில் பேசிய தனுஷ், "நான் ஒரு டியூஷனில் சேர்ந்தேன். ஆனால் படிப்பதற்காக போகவில்லை. அங்கு எனது கேர்ள் ஃப்ரெண்ட் இருந்தாங்க. அவங்கக்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணதான் அங்கு போனேன். பத்துநாள் டியூஷன் போனேன். ஆனா அந்த டீச்சர் என்னையே எழுப்பி எழுப்பி கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். இது வேலைக்கு ஆகாது என டியூஷன் போவதை நிறுத்திவிட்டேன்.

கேர்ள் ஃப்ரெண்டுக்கு சிக்னல் விட்ட தனுஷ்
அதன் பிறகு டியூஷனுக்கு வெளியேதான் காத்திருப்பேன். ஆனால் நான் வெளியில் வெயிட் பண்ணுவது அவருக்கு தெரிய வேண்டுமல்லவா. அதனால் என் பைக்கின் ஹார்னை எப்போதெல்லாம் அந்தப் பக்கம் போகிறேனோ அடிப்பேன். அதுதான் நான் வந்துவிட்டேன் என உணர்த்துகிற சிக்னல். இந்த சிக்னலை கேட்டதும் உள்ளே இருக்கும் அவருக்கும் நான் வெளியில் வெயிட் பண்ணுவது தெரிந்துவிடும்.

சிக்னல் கொடுப்பதை கண்டுபிடித்த ஆசிரியர்
இப்படியே போய்க்கொண்டிருக்க சில நாள்களுக்கு பிறகு ஆசிரியர் கண்டுபிடித்துவிட்டார். ஒருநாள் அவர் டியூஷனில் படிப்பவர்களிடம்; உள்ளே இருக்கும் நீங்கள் எல்லாம் டிகிரி வாங்கி ஆளாகிடுவீங்க. வெளியே இருக்கான் பாருங்க ஒருத்தன் அவன் நடுத்தெருவுல போய் கூத்தாடுவான் என சொல்லியிருக்கிறார். அது இப்போது உண்மையாகிவிட்டது. நான் கூத்தாடாத தெருவே தமிழ்நாட்டில் இன்று இல்லை." என்றார்.

தனுஷ் பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள்
இந்நிலையில் தனுஷின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. இதுகுறித்து ட்விட்டரில் ஒருவர், "இந்த பேச்செல்லாம் உங்களைப்போல் பெரியாட்கள் மேடை அலங்காரத்துக்காக பேசுவதற்கு நல்லா இருக்கும் தனுஷ். அந்த ஆசிரியர் சொன்னதுபோல் 99 சதவீதம் இன்னும் தெருவில்தான் நிக்குது அதான் உண்மை. ஏற்கனவே மாணவ சமுதாயம் இங்க சூப்பரா ஆடிட்டு இருக்கு. இதுல உங்களை போஅல் ஆள்கள் சலங்கை வேற கட்டிவிடுங்க" என பதிவிட்டுள்ளார். இதேபோல் முகநூலிலும் தனுஷின் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

முகநூலில் எழுந்திருக்கும் கண்டனம்
முகநூலில் இதுகுறித்து ஒருவர், "ஏதோ நல்ல நடிகனாச்சேனு பாத்தாக்கா, ரஜினி மாதிரியே சிரிக்கிறது, பாடிலாங்குவேஜ் இமிடேட் பண்றது, குட்டிக்கதை பாணியில் ஏதாவது உளர்றதுனு என்ன இழவு இது? இவரு ஏதோ படிக்காம டியூசன் போகாம பைக்ல பொண்ணுங்க பின்னாடி சுத்திகிட்டு இருந்தாராம். வாத்தியார் நீ கூத்தாடியாத்தான் போவேனு திட்டினாராம். இவரு அதனால் இத்தா பெரிய நடிகனாயிட்டாராம். ஏன்டா ஏற்கனவே ஆயிரத்தெட்டு டைவர்சன்ல பசங்க படிக்க முடியாம பன்னி மேய்ச்சிகிட்டு இருக்கானுக. இதில் உங்களால முடிஞ்ச அளவுக்கு நீங்களும் டேமேஜ் பண்ணனுமா? ஒழுங்கா நடிக்கிற வேலையை மட்டும் பாருங்கடா" என பதிவிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











